பதிவு செய்த நாள்
23 செப்2017
00:29
புதுடில்லி : மக்கள் தொடர்பு துறை, 2016 – 17ம் நிதியாண்டில், 18 சதவீத வளர்ச்சி கண்டு, 1,315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஒரு நிறுவனம் தொடர்பான தகவல்களை, பத்திரிகை, டிவி, வானொலி, இணையம் ஆகியவற்றின் வாயிலாக, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில், மக்கள் தொடர்பு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
இந்நிறுவனங்கள் குறித்து, பி.ஆர்.சி.ஏ.ஐ., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் தொடர்பு துறை, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இத்துறை, 2016 – 17ம் நிதியாண்டில், 18 சதவீத வளர்ச்சி கண்டு, 1,315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2020ல், 2,000 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து புதுமையாகவும், அறிவார்ந்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கொள்வதன் மூலமும், மக்கள் தொடர்பு துறை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.இதற்கு, சில்லரை விற்பனை, வாகனம் மற்றும் நுகர்பொருள் துறைகள், முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
நுகர்பொருள் மற்றும் சில்லரை விற்பனை துறைகள் வாயிலான வருவாய், 14 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறை சார்ந்த வருவாய், 8 சதவீதம் தான் உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 20 சதவீதமாக இருந்தது. அது போல, நிதி சேவைகள் துறையின் வருவாய் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக, மக்கள் தொடர்பு பணிகளுக்காக செலவழிப்பதில், தனியார் துறையின் பங்களிப்பு, 95 சதவீதமாக உள்ளது.
மக்கள் தொடர்பு துறையில், தகுதியான ஆட்கள் கிடைப்பதும், அவர்களை தக்க வைத்துக் கொள்வதும் கடினமாக உள்ளது. அதனால், அனைத்து நிறுவனங்களும், பணியாளர் நலன் மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க துவங்கி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|