பதிவு செய்த நாள்
23 அக்2017
00:08
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளின் மறுநாளை, லக்ஷ்மிபூஜையாகவும், தங்கள் நிதி ஆண்டின் துவக்க நாளாகவும், ஒரு சம்பிரதாய அடிப்படையில் பங்குசந்தையின் தரகர் சமூகம் கொண்டாடுகிறது. அந்தநாளில், தங்கம் வாங்குவதும், புதிய முதலீடு செய்வதும் தங்களுக்கு அதிர்ஷ்டமும், லாபமும் ஈட்டும் என்ற நம்பிக்கை நிறைந்தவர்கள்அதிகம்.
இது ஒரு வடஇந்திய கலாச்சார நிகழ்வு என்றாலும், சந்தையின் விடுமுறை அமைப்பு இந்த தினங்களை தெற்கிலும் பிரபலப்படுத்தி விட்டன. அந்த மாலைப் பொழுது தென்னாட்டு பங்கு வர்த்தக நிறுவனங்களிலும் விமரிசையாக கொண்டாடுவதை பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு ஆண்டையும் ‘சம்வட்’ என்று அழைப்பது வழக்கம். அப்படி துவங்கிய இந்த புதிய ஆண்டை ‘சம்வட் – 2074’ என்று அழைக்கிறோம்.
சாதனை:
ஒவ்வொரு சம்வட் ஆண்டிலும் சந்தையின் குறியீடுகள் எத்தகைய லாபம் தருகின்றன என்பதை சந்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கும். சென்ற சம்வட் துவங்கிய மறுநாள், பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். இது சந்தைக்கு முதலில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தந்தாலும் ஆண்டின் நிறைவில், சந்தையின் குறியீடான, ‘சென்செக்ஸ்’ 16.67 சதவீதம் லாபம் தந்தது. ஆகவே, சென்ற சம்வட், வங்கி வட்டி விகிதத்தை விட கணிசமான அளவு அதிக லாபம் ஈட்டி உள்ளது என்றே சொல்லலாம். பணமதிப்பு நீக்க முடிவோடு துவங்கிய சம்வட் 2073, தொடர்ந்து ஜி.எஸ்.டி., சார்ந்த பல சிக்கல்களை சந்தித்தும் இந்த சாதனையை படைத்துள்ளது.
சந்தையின் லாபம், ஒரு குறிப்பிட்ட துறை அல்லது சில துறைகளை சார்ந்து இருக்காமல், அனைத்து துறைகள் சார்ந்தும் அமையும்போது, அதுவே சந்தை முதிர்நிலையையும், மதிப்பீட்டளவில் உச்சத்தையும் தொட்டதற்கான அறிகுறி என்று கூறலாம். ஆனால், முடிந்த சம்வட் 2073 அத்தகைய உச்சத்தை தொட்டதாக எடுத்துக் கொள்ளமுடியாது. சந்தையின் முக்கிய துறைகளான, மருந்து உற்பத்தி, ஐ.டி., போன்றவையும்,பொதுத் துறை வங்கிகளும், மின் உற்பத்தி நிறுவனங்களும் சந்தை வளர்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதை நாம் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.
லாபத்திற்கு வழிவகுக்கும்:
நடப்பு சம்வட்டில், சந்தை மேலும் உயர, இதுவரை பங்கேற்காத துறை சார்ந்த பங்குகள் தங்கள், நஷ்டத்தை குறைத்தும், லாபத்தை அதிகரித்தும் இயங்குமேயானால், சந்தை மேலும் உயர வாய்ப்பு அதிகம். அதேபோல, ஜி.எஸ்.டி., முழுமையாக ஏற்பு அடைந்து, வரி ஏய்ப்பு செய்யாமல் அனைவரும் வரி செலுத்தும் சூழல் ஏற்பட்டால், அதுவும் சந்தைக்கு பெரும் சாதகமாக அமையும். சென்ற சம்வட்டில், மிகச் சிறப்பாக மதிப்பு கூடிய பங்குகள், நடப்பு சம்வட்டில் மதிப்பை இழக்கவோ அல்லது தேங்கி கிடக்கவோ நேரலாம். இது ஒவ்வொரு சம்வட்டிலும் நாம் காணும் நிகழ்வு.
சென்ற ஆண்டின் பங்கு விலையேற்றம் சார்ந்து மட்டுமே முதலீடு செய்வதை தவிர்ப்பது அவசியம். ஒவ்வொரு பங்கையும், மதிப்பாய்வு செய்து, கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தி முதலீடுகளை செய்வது வரும் சம்வட்டில், லாபம் அடைய வழிவகுக்கும். ஆக, சந்தையின் தீபாவளி மற்றும் சம்வட் உற்சாகத்தை, புறம் தள்ளி விட்டு, மதிப்பீட்டு ஆய்வில் ஒவ்வொரு முதலீட்டாளரும் முழுகவனமும் செலுத்த வேண்டிய தருணம் இது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|