பதிவு செய்த நாள்
14 ஜன2018
01:36
புதுடில்லி:நாடு முழுவதும், சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – வே பில்’ எனப்படும், மின்னணு வழித்தட ரசீது நடைமுறை, பிப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, ‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில், மாநிலங்கள் இடையே, 10 கி.மீ., துாரத்திற்கு மேல் எடுத்துச் செல்லப்படும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சரக்கிற்கு, பிப்., 1 முதல், ‘இ – வே பில்’ கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.பதிவுஏற்கனவே, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில், ‘இ – வே பில்’ நடைமுறை அமலில் உள்ளது. இம்மாநிலங்கள், தினமும், 1.40 லட்சம், ‘இ – வே பில்’களை தயாரிக்கின்றன.இதர மாநிலங்களுக்கு, இம்மாத இறுதி வரை, சோதனை அடிப்படையில், ‘இ – வே பில்’ மூலம், சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், www.ewaybill.nic.in வலைதளத்தில், அவற்றின், ஜி.எஸ்.டி.ஐ.என்., எண்ணை குறிப்பிட்டு, பதிவு செய்து, ‘இ – வே பில்’ தயாரிக்கலாம்.ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாத சரக்கு போக்கு வரத்து நிறுவனங்கள், ‘பான்’ அல்லது ‘ஆதார்’ எண் வழங்கி, பதிவு செய்யலாம்.அனைவருக்கும், ‘ஆன் லைன்’ மூலம், ‘அலர்ட் மெசேஜ், எஸ்.எம்.எஸ்.,’ ஆகியவை அனுப்பப்படும்.‘இ – வே பில்’ தயாரிக்கும் போது, நிறுவனங்கள் அல்லது சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், சரக்கு எடுத்துச் செல்லப்படும் வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிடலாம். வாகனம் பழுதாகி நின்றாலோ அல்லது வேறு வாகனத்திற்கு சரக்குகளை மாற்றினாலோ, பதிவு எண்ணை மாற்றி கொள்ளலாம்.‘இ – வே பில்’ தயாரித்த, 24 மணி நேரத்திற்குள், அதை ரத்து செய்யும் வசதியும் உள்ளது. மோட்டார் இன்ஜின் பொருத்தப்படாத வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கு, ‘இ – வே பில்’ தேவையில்லை.
விலக்கு
காய்கறிகள், பழங்கள், மீன், குடிநீர் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. சரக்கு போக்குவரத்தில், வரி ஆய்வாளர் கேட்டால், ‘இ – வே பில்’ காண்பிக்கப்பட வேண்டும். ஆய்வாளர், சரக்கு வாகனத்தை, 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்தால், அதுபற்றி, வாகன ஓட்டுனர், வலைதளத்தில் புகார் தெரிவிக்கலாம். இதற்கான வழிமுறைகள், வலைதளத்தில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அலைச்சல் இல்லை
இனி, வரி செலுத்துவோர் மற்றும் சரக்கு போக்கு வரத்து நிறுவனங்கள், சரக்குகளை, ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்புவதற்கான, ‘பாஸ்’ கோரி, வரி அலுவலகத்திற்கோ அல்லது சோதனைச்சாவடிக்கோ செல்ல தேவைஇல்லை. சுயமாகவே, வலைதளத்தில், மொபைல் ஆப், எஸ்.எம்.எஸ்., மூலம், ‘இ – வே பில்’ தயாரித்து, போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம்.பிரகாஷ் குமார் ,தலைமை செயல் அதிகாரி, ஜி.எஸ்.டி.என்.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|