பதிவு செய்த நாள்
07 ஏப்2018
00:52
சென்னை:தென் மாநிலங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில், தொழில் மையங்களை உருவாக்கவும், இம்மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களின் முன்னேற்றத்துக்காகவும், மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக, சி.ஐ.ஐ., எனும், இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறப்பு கவனம்
இது குறித்து, இக்கூட்டமைப்பின் தென் பிராந்திய தலைவர், ஆர்.தினேஷ் மேலும் தெரிவித்ததாவது:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மிகப் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்த வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து பேணும் வகையில், இரண்டாம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்.
மேலும், குறு, சிறு, மத்திய தொழில் பிரிவின் வளர்ச்சிக்கு தேவையான கொள்கைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம்.இதன் தொடர்ச்சியாக, ‘போட்டித்திறன் மிக்க துடிப்பான தென்னிந்தியா’ என்பதை, 2018- – 19ம் ஆண்டுக்கான கருப்பொருளாக எடுத்துள்ளோம்.இத்திட்டத்தின் அடிப்படையில், திறன் மேம்பாடு, பயிற்சி, பெண்களுக்கு சம வாய்ப்பு, சிறந்த நிர்வாகம், வெளிப்படைத் தன்மை போன்ற முக்கியமான அம்சங்களில் சிறப்பு கவனம் எடுக்கப்படும்.
இக்கூட்டமைப்பின் உறுப்பினர்களில், 65 சதவீதம் பேர், சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான்.தென் மாநிலங்களில், சிறு விவசாயிகளுக்கு ஆதர வளிக்கும் நோக்கத்துடன், குறிப்பிட்ட பயிர்களுக்கான சிறப்பு முனைப்பு திட்டங்களையும் கூட்டமைப்பு துவக்கி இருக்கிறது.
செயற்பணி குழு
மேலும், சிறு தானிய சாகுபடியை ஊக்குவிக்கவும், அவற்றை முன்னிலைப்படுத்தவும் வசதியாக, சிறு தானியங்களுக்கான ஒரு செயற்பணி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|