பதிவு செய்த நாள்
08 ஏப்2018
00:11
புதுடில்லி:எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மூன்று ஆண்டுகளாக அதிகரித்ததை அடுத்து, அதன் இறக்குமதி வளர்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளது.
முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசு, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க, 2012ல், தேசிய மின்னணு கொள்கையை அறிவித்தது. இதன் மூலம், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அரசு மானியம், ஏற்றுமதிக்கு வரிச் சலுகைகள் ஆகியவையும், மின்னணு சாதனங்கள் துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
இதன் காரணமாக, மூன்று ஆண்டுகளில், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து உள்ளது.
இது குறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், கே.ஜே.அல்போன்ஸ், ராஜ்யசபாவில் கூறியதாவது:தேசிய மின்னணு கொள்கையால், உள்நாட்டில் எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பு அதிகரித்து உள்ளது. ‘ஆப்பிள், சாம்சங், நோக்கியா, எல்.ஜி., எச்.டி.சி., லாவா, இன்டெக்ஸ்’ உள்ளிட்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், இங்கு தொழிற்சாலைகளை அமைத்து உள்ளன.
கணினி மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பில், ‘எச்.பி., லெனோவா, டெல், சிஸ்கோ’ உட்பட, பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.இதன் காரணமாக, உள்நாட்டில், எலக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவையை சமாளிக்க முடியாமல் இருந்த நிலை மாறி வருகிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பால், இது சாத்தியமாகியுள்ளது.
கடந்த, 2013 -– 14ம் நிதியாண்டில், உள்நாட்டு எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி, மதிப்பு அடிப்படையில், 1.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2016- – 17ல், 3.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி, முறையே, 5.49 சதவீதம்; 27.79 சதவீதம் மற்றும், 30.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி அதிகரித்த காரணத்தால், அவற்றின் இறக்குமதி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.மதிப்பீட்டு ஆண்டுகளில், எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி வளர்ச்சி, 12.94 சதவீதம்; 9.06 சதவீதம் மற்றும் 4.74 சதவீதம் என்ற வகையில் குறைந்துள்ளது.
அதேசமயம், இதே காலத்தில், இறக்குமதியான மின்னணு பொருட்களின் மதிப்பு, 2.16 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மின்னணு பொருட்கள் தயாரிப்பு துறையை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்றுமதி உயர்ந்தது
நாட்டின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த, 2015 -– 16ம் நிதியாண்டில், எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி, 38 ஆயிரத்து, 737 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2016 -– 17ல், 0.06 சதவீதம் வளர்ச்சி கண்டு, 38 ஆயிரத்து, 759 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச்சுடன் முடிந்த, 2017- – 18ம் நிதியாண்டில், ஏற்றுமதி மேலும் அதிகரித்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|