பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:21
கோவை:-தமிழகத்தில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், சர்க்கரை ஆலைகள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
‘சர்க்கரை ஏற்றுமதி இலக்கில் இருந்து, தமிழக ஆலைகளுக்கு விலக்களிக்க வேண்டும்’ என, தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சங்க தலைவர், பழனி ஜி பெரியசாமி வலியுறுத்திஉள்ளார்.
விலை சரிவு
மாநிலம் முழுவதும், 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றின் மூலம், 2011- – 12ம் ஆண்டில், 2.54 கோடி டன் கரும்பு அரவை செய்யப்பட்டு, சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.தொடர்ந்து, பருவமழை காரணமாக, 2012 –- 13ல், 2.14 கோடி டன், 2013- – 14ல், 1.57 கோடி டன் என்ற அளவில் அரவைக்கு வந்த கரும்பு எண்ணிக்கை குறைந்தது. 2016ல் இரண்டு பருவமழையும் பொய்த்ததால் வெறும், 65 லட்சம் டன் கரும்பு மட்டுமே கிடைத்து உள்ளது.
மூலப்பொருட்கள் கிடைக்காததால், தமிழக ஆலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆனால் சர்க்கரை விலை, அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு, 2.5 கோடி டன் சர்க்கரை தேவை. ஆனால் தற்போதே, பிற மாநில உற்பத்தி பங்களிப்பால், 1.10 கோடி டன் உபரி ஏற்பட்டு, சர்க்கரை விலை சரிந்துள்ளது.
உலகளவிலும் சர்க்கரை விலை சரிவை கண்டுள்ளதால், தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்வதில், ஆலை உரிமையாளர்களுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சும்.தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் சங்க தலைவர், பழனி ஜி பெரியசாமி கூறியதாவது:தமிழகத்தில், 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக மழை பொய்த்ததால், கரும்பு உற்பத்தி படிப்படியாக குறைந்துள்ளது. 2016ம் ஆண்டு, இரண்டு பருவமழையும் பொய்த்து ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, 65 லட்சம் டன் கரும்பு மட்டுமே, ஆலைகளுக்கு கிடைத்துள்ளது.
இதனால், சர்க்கரை உற்பத்தி செலவு, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.
அவகாசம்
பணியாளர்கள் ஊதியம், கொள்முதல், உற்பத்தி செலவினங்கள் உயர்வு, சர்க்கரை விலை சரிவு, வங்கி வட்டி ஆகியவற்றால், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.இதன் காரணமாகவே, இந்திய அளவில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 22 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் தற்போதைய உதவி திட்ட அறிவிப்புகள், தற்காலிக தீர்வாக மட்டுமே அமையும்.மாறாக, சர்க்கரை விலையில், 75 சதவீதம் மட்டும் கரும்பின் விலையாக அளித்தல் மற்றும் உபரி கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தும் விதத்தில் ஊக்கமளித்து, மத்திய – மாநில அரசுகள் நிரந்தர தீர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
தமிழகத்தில் இந்தாண்டு உற்பத்தியாகியுள்ள சர்க்கரை, 6 லட்சம் டன் மட்டுமே. ஆனால், ஓராண்டு தேவை, 15 லட்சம் டன். இச்சூழலில், சர்க்கரை ஆலைகளுக்கான ஏற்றுமதி இலக்கில் இருந்து விலக்களிக்க வேண்டும்.அதிக உற்பத்தி செய்துள்ள மாநிலங்கள் மூலம், இலக்கை எட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வங்கி கடன்களை திரும்ப வழங்க உரிய கால அவகாசம்ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|