பதிவு செய்த நாள்
09 ஜூலை2018
00:31
வர்த்தகப் போர்களின் காலத்தில் நம் முதலீடுகளை எப்படி வழிநடத்துவது? இந்தியா, இந்த வர்த்தக போர்களில் பங்கேற்காமல் தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள இயலுமா? ஒருவேளை, இந்தியாவும் இந்த போருக்குள் இழுக்கப்பட்டால், நாம் எப்படி பாதிக்கப்படுவோம்? அத்தகைய சூழ்நிலையில் நம் முதலீடுகளை காப்பது எப்படி?
அடிப்படையில், அமெரிக்கா தொடுக்கும் வர்த்தகப் போர்கள்தான் அதிகம். உலக வர்த்தகத்தில், ஒரு நுகர்வு நாடாக மட்டுமே இருந்த அமெரிக்கா, தன் உற்பத்தி தொழில்கள் அழியும் சூழ்நிலையில், அவற்றை மீண்டும் தூக்கி நிறுத்தும் முயற்சியே இந்த போர்கள்.வெளியில் இருந்து வரும் இறக்குமதிகள், உள்நாட்டு தொழில்களை நலிவடையச் செய்யும்பட்சத்தில், அந்த இறக்குமதிகளின் விலை கூடும்வண்ணம் செய்தோ, அல்லது இறக்குமதியை தடுத்தோ, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கும் கொள்கைகள் உலகளவில் கையில் எடுக்கப்படுகின்றன.
யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்த, பிரீடிரேட் உலகம் மாறிவிட்டதை முதலில் ஏற்போம். அப்படி செய்து வளர்ந்த நிறுவனங்கள், இனிவரும் காலங்களில் தொடர்ந்து, வளர்ச்சி பெருக புதிய சந்தைகளை தேட வேண்டிய தருணம் இது.சீனா போல பெரும் அளவில் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்திய நாடுகள் இந்த போர்களால் வெகுவாக பாதிக்கப்படும்.
ஆனால், தன் நுகர்வு அளவில் மட்டும் உற்பத்தி செய்யும் நாடுகள், இதனால் அதிகம் பாதிக்கப்படாது. அதுவும், வெளியில் இருந்து வரும் இறக்குமதிகளை தடுத்து மட்டுமே, தன் உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகள், இந்த போர்களை ஓரளவு எதிர்கொள்ள முடியும்.இந்தியா இந்த போர்களில் இருந்து முழுவதும் தப்பிக்க முடியாது.
உதாரணத்திற்கு, ஹார்லி டேவிட்சன் என்ற உயர்விலை இருசக்கரவாகனத்தின் மீது, நம்நாட்டின் இறக்குமதி வரியை, அமெரிக்க அதிபர் கடுமையாக எதிர்த்தார். இதன் நீட்சியாக, அந்த நிறுவனம் அமெரிக்காவிற்கு வெளியில் உற்பத்தி செய்யக்கூடும். ஒருவேளை இந்தியாவில், உற்பத்தி செய்தால், அது உள்நாட்டில் இதே ரக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பாதிக்கலாம்.
சீனாவில் இருந்து இறக்குமதிகளை குறைக்க பல நாடுகள் தீவிரம் காட்டுகின்றன. பொருள்வாரியான, வரிகள் மற்றும் தடைகள் மூலம் சந்தை நுழைவு இறுக்கப்படுகிறது. இது அந்த உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக முடியலாம்.இதற்கு இந்திய ஸ்டீல் உற்பத்தி கொள்கைகள் நல்ல உதாரணம்.
சீனாவோடு, இந்தியா தொடர்ந்து இருதரப்பு வர்த்தக பேச்சு மூலம் பல சலுகைகளை பரிமாறி வருகிறது. சீனா தொடர்ந்து நமக்கு ஏற்றுமதி செய்ய, நம்நாட்டில் இருந்தும் பல பொருட்களை இறக்குமதி செய்ய சம்மதம் தருகிறது.சர்க்கரை, சீனாவில் தட்டுப்பாட்டில் இருக்கும் பொருள். இந்தியாவில் இருந்து வரும் சர்க்கரையை வாங்க, சீனா ஆர்வம் காட்டுகிறது.
பருத்தியும் இந்த வகையில் சேரும். உள்நாட்டு தொழில்களுக்கு, இத்தகைய முடிவுகளால் சாதக பாதகம் இரண்டும் ஏற்படலாம். சர்க்கரை ஆலைகள் பயன் அடையும். ஆனால், ஜவுளித் துறை பாதிக்கப்படலாம். ஆனால், விவசாயிகளுக்கு இந்த இரண்டு முயற்சிகளும் நன்மை பயக்கும்.வர்த்தக முடிவுகளை, ஒவ்வொன்றாக சீராய்வு செய்து, முதலீட்டு பார்வைகளை வகுத்து பழக வேண்டிய நேரம் இது. எதையும் கண்மூடித்தனமான அனுமான அடிப்படையில் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|