பதிவு செய்த நாள்
10 ஆக2018
00:32
நியூயார்க்:‘இந்திய பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில், 7.3 சதவீதமாக உயரும்’ என, பன்னாட்டு நிதியம் மதிப்பீடு செய்து உள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களால், முதலீடுகள் அதிகரித்துள்ளன; மக்களின் தேவைப்பாடும் உயர்ந்து வருகிறது.இதனால், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.3 சதவீதமாக வளர்ச்சி காணும். இது, 2019 -– 20ம் நிதியாண்டில், 7.5 சதவீதமாக அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, குறுகிய கால அளவில், இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன.
அதேசமயம், ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலையேற்றம், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, வீட்டு வாடகை படி உயர்வு போன்றவை, பணவீக்க உயர்வுக்கு வழி வகுக்கும்.
சில்லரை பணவீக்கம்
நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், 5.2 சதவீதமாக உயரும். இது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட அதிகம். கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், இறக்குமதி செலவினம் உயரும். இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.6 சதவீதம் அதிகரிக்கும்.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றால், 2017- – 18ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.முதலீடு விறுவிறுப்படைந்துள்ளதால், வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 3.6 சதவீதமாக குறைந்திருந்தது.இதற்கு, இயல்பான பருவமழை, வேளாண் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேவைப்பாடு குறைவு, ரூபாய் மதிப்பு உயர்வு போன்றவற்றை கூறலாம்.வங்கித் துறையில், வாராக் கடனை குறைக்கவும், பொதுத் துறை வங்கிகளின் பங்கு மூலதனத்தை உயர்த்தவும், மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|