பதிவு செய்த நாள்
19 ஆக2018
05:40
மும்பை: ''நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், 'சைபர் செக்யூரிட்டி' எனப்படும் கணினி பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை பலப்படுத்த, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் வலியுறுத்தியுள்ளார்.அவர், மும்பையில், மின்னணு தொழில்நுட்பத்தில், மொபைல்போன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்ய உதவும், ‘யு.பி.ஐ.,–2’ என்ற, மேம்படுத்தப்பட்ட, ‘ஆப்’ ஐ வெளியிட்டு மேலும் பேசியதாவது:இந்தியாவில், தற்போது, மின்னணு பணப் பரிவர்த்தனைகளில், சிறப்பான வளர்ச்சி காணப்படுகிறது.இது, ரிசர்வ் வங்கி துவக்க காலத்தில் எடுத்த, கணினி சார்ந்த ஒருங்கிணைப்பு திட்டங்களால், சாத்தியமாகியுள்ளது.இந்தியாவின், மின்னணு பணப் பரிவர்த்தனை கட்டமைப்பு, பிற நாடுகள் பின்பற்றும் அளவிற்கு, தரத்தை நிர்ணயிக்கக் கூடியதாகவும், சிறப்பான வழிமுறைகளை கொண்டதாகவும் திகழ்கிறது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், நிதிச் சேவை துறையில் போட்டித் தன்மையை அதிகரித்து, பணப்பரிவர்த்தனைகளில் புதிய முறைகளை உருவாக்க துணை புரியும்.அனைத்து மக்களும், பாதுகாப்பான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான், நம் இலக்கு. அதற்கு, 'யு.பி.ஐ.,' போன்ற 'ஆப்'கள் தொடர்ந்து உதவும்.அத்தகைய சூழலில், கணினி வாயிலான தகவல்கள், பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, நிதிச் சேவை நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கணினி ஒருங்கிணைப்பில், மிக வலிமையாகவும், அவற்றுக்கான செலவினங்களில் எவ்வித சமரசத்திற்கும், இடமளிக்காமலும் இருக்க வேண்டும்.நிதிச் சந்தைக்கான ஒழுங்குமுறை விதிகள், வலுவான கட்டமைப்பு, வாடிக்கையாளர் சார்ந்த திட்டங்கள், ஒட்டுமொத்த மேற்பார்வை ஆகியவற்றை ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்ளும்.மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு, வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நடவடிக்கைகள், சேவைகளுக்கு நியாயமான கட்டணங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பொறுப்பு, நிதிச் சேவை நிறுவனங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|