பதிவு செய்த நாள்
20 ஆக2018
07:09
கடந்த வாரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 70 ரூபாய்க்கு மேல் சரிந்த போது, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. வழக்கமாக உள்நாட்டுப் பிரச்னைகளே முன்வைக்கப்பட்ட நிலையில், இம்முறை புதிய பெயர் ஒன்று உச்சரிக்கப்பட்டது. அது, துருக்கி... துருக்கி, ‘லிரா’வுக்கும், இந்திய ரூபாய்க்கும் என்ன சம்பந்தம்?
முதலில் துருக்கியையும், அதன் அரசியல் பொருளாதாரத்தையும் புரிந்துகொண்டால் தான் பிரச்னையின் ஆழம் புரியும். ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே இருக்கும் நாடு, துருக்கி; அதன் அதிபர், எர்துவான்; அதன் நாணயம், லிரா.எர்துவான், அமெரிக்க தாராளமய பொருளாதாரத்தை விரும்பாதவர். அதுவும், 2008 பொருளாதார தளர்ச்சிக்குப் பின், முற்றிலும் மாறிவிட்டார். தமது நாட்டில் அனைத்து வசதிகளையும் அரசே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். உயர உயரமான கட்டடங்களை நாடெங்கும் எழுப்பத் துவங்கினார். அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு தான், துருக்கியை இப்போது சிக்கலில் ஆழ்த்திஉள்ளது.
துருக்கியின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏகமாக எகிறிவிட்டது. பணவீக்கமோ, 15.6 சதவீதம். எர்துவானின் தவறான பொருளாதார அணுகுமுறையால், அந்த நாட்டில் ஏகப்பட்ட சிக்கல்.
போர் ஆயுதம் :
இதன் தொடர்ச்சியாக துருக்கியின் நாணயமான, லிரா படபடவென சரிந்துவிட்டது. கடந்த ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு, 40 சதவீத அளவுக்கு சரிந்துவிட்டது. உள்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி. வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலை. ஆனால், எர்துவானோ, எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார். சொல்லப் போனால், அந்த நாட்டில் இயங்கும் வங்கிகள் எல்லாம் அன்னிய முதலீட்டிலேயே இயங்குகின்றன. எந்த வளரும் நாடுகளோடு ஒப்பிட்டாலும், துருக்கியின் கடன் அளவு மிக மிக அதிகமே.
இந்நிலையில், அமெரிக்காவோடு துருக்கிக்கு நல்ல உறவும் இல்லை; அதிபர் டொனால்டு டிரம்பும் சும்மா இல்லை. துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியத்தின் மீது வரி விதித்தார். அது, ஏற்கனவே பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த துருக்கிக்கு மேலும் ஓர் அடி.இந்நிலையில், ஒரு பாதிரியாரை துருக்கி அரசு கைது செய்து வைத்துள்ளது. அமெரிக்கா பாதிரியாரான ஆண்ட்ரூ பரன்சன் என்பவர், துருக்கியில் இருக்கும் ஓர் அரசியல் குழுவுடன் தொடர்பில் இருந்தார் என்று துருக்கி அரசு கைது செய்து, இரண்டு ஆண்டு களாக விசாரித்து வருகிறது. அவரை விடுதலை செய்ய முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றமும் தெரிவித்து விட்டது.
வெகுண்டெழுந்துவிட்டார் டிரம்ப். உடனே, உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வரியை இரட்டிப்பாக்குகிறேன் என, தடாலடியாக அறிவித்தார்; எர்துவானும் சும்மா இல்லை. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், பானங்கள், புகையிலை மீதான வரியை உயர்த்தி பதிலடி கொடுத்தார்.இதுநாள் வரை போர் என்றால், அது ஆயுதங்களோடு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. முதல்முறையாக தற்போது அமெரிக்கா, ‘வர்த்தகத்தை’யே ஒரு போர் ஆயுதமாக மாற்றிவிட்டது. வரிகளை உயர்த்தி, அடுத்த நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்குவது புது அணுகுமுறை.
இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன், என் மக்கள் என்னோடு இருக்கின்றனர் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் எர்துவான். இதன் பாதிப்பை அவரது நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.ஒரே நாளில் அமெரிக்க டாலருக்கு இணையான துருக்கியின் லிரா, 16 சதவீதம் வரை சரிந்தது. அமெரிக்காவோடு மோதல் என்றவுடனேயே, சர்வதேச பங்குச் சந்தைகளும், நாணயங்களும் வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கின.இங்கிருந்து தான் நம்முடைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் துவங்குகிறது.துருக்கியோடு வர்த்தக உறவு பூண்டுள்ள தெற்காசிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சீனா, தென் கொரியா, ஜப்பான், மலேஷியா, வியட்னாம் ஆகியவை பிற நாடுகள்.
பல பொருட்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது துருக்கி. லிரா மதிப்பு வீழ்ச்சி அடையும் போது, பொருட்களின் விலை உயர்ந்துவிடும். அதனால், வர்த்தக பற்றாக்குறை துருக்கிக்கு ஏற்படலாம். இரு தரப்பு வர்த்தகமும் இதனால் வீழ்ச்சியைச் சந்திக்கலாம்.இதை விட முக்கியமாக, லிராவின் வீழ்ச்சி என்பது, அந்த நாட்டுடன் மட்டும் நின்றுவிடாது. அது, வர்த்தக தொடர்பு கொண்டுள்ள இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம். சீட்டுக்கட்டு சரிவது போல் நாணய மதிப்பு வீழ்ச்சி பரவலாகலாம்.
மேலும், இத்தகைய வீழ்ச்சி காரணமாக, பல வளரும் நாடுகளில் முதலீடு செய்துள்ள பெரிய முதலீட்டு பண்டுகள், வங்கிகள், தனிநபர்கள் தங்களது முதலீடுகளைத் திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடலாம். இதனால், அங்கே பொருளாதாரச் சரிவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடலாம். லிரா மதிப்பு வீழ்ச்சியால், ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாம் வெளிநாட்டில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு கொடுக்கும் தொகை உயர்ந்துவிடும். இதனால் தான், சென்ற வாரம் பெட்ரோல் விலை தமிழகத்தில், 80 ரூபாயையும் கடந்தது. இத்தனைக்கும் கச்சா எண்ணெய் விலை ஓரளவுக்கு குறைந்திருந்தும், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததற்கு இதுவே காரணம்.
அணுகுமுறை ;
உலகமே தற்போது வேறொரு யதார்த்த நிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறது. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற, நாமக்கல் கவிஞர், ‘சத்தியாகிரகத்தை’ முன்வைத்துப் பாடினார். ஆனால் இன்று, அதே பாடல் டிரம்புக்கும், உலக பொருளாதாரத்துக்கும் வெகுவாகப் பொருந்துகிறது.அவர், கத்தியின்றி ரத்தமின்றி, வர்த்தகத்தையே கூர் ஆயுதமாகப் பயன்படுத்தி, நாடுகளை அச்சங்கொள்ள வைக்கிறார். தற்காப்புவாதம் என்ற பெயரில், ‘அமெரிக்காவே முதல்’ என்ற கோஷத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருபவர் டிரம்ப்.
அதனால், அமெரிக்கா மட்டும் சுபிட்சமாக வாழ்ந்துவிட முடியும் என்று கருதினால், அது பிழையான அணுகுமுறையாகவே ஆகும்.ஏனெனில், தாராளமயமாக்கல், திறந்த பொருளாதாரம் என்ற பாதையை வகுத்துக் கொடுத்ததே அமெரிக்கா தான்! அது, இப்போது யு-டர்ன் அடித்து, தான், தனக்கு என்று பாதுகாப்புவாதத்துக்குள் புகும்போது, இதர நாடுகள் அனைத்தும் திண்டாடுகின்றன. சர்வதேச பொருளாதார வலைப்பின்னலே சிக்கலாகிறது. அனைவருக்கும் வளர்ச்சி என்ற பரந்த மனப்பான்மை ஒன்றே, இன்றைய காலகட்டத்தின் தேவை. சுருங்கிப் போவதால், வலிகளே மிகும். இதை யார் அமெரிக்காவுக்குச் சொல்வது?
– ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|