பதிவு செய்த நாள்
12 அக்2018
00:20
புதுடில்லி:சர்வதேச நிலவரங்கள் காரணமாக சரிந்துள்ள ரூபாய் மதிப்பை உயர்த்த, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.
நேற்று, பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. பங்கு விலை சரிவால், முதலீட்டாளர்களுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. அது போல, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, இதுவரை இல்லாத அளவிற்கு, 74.45 ஆக வீழ்ச்சி கண்டது.
சர்வதேச நிலவரம்
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நேற்று, நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவிற்கு, சர்வதேச நிலவரங்கள் தான் காரணம். அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்தது.இதை, டொனால்டு டிரம்ப் கண்டித்த நிலையில், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை, பன்னாட்டு நிதியம் குறைத்தது.
இந்த இரு அறிவிப்புகள் காரணமாக, அமெரிக்க பங்குச் சந்தைகள், பிப்ரவரிக்கு பின், மிகக் கடுமையான சரிவை சந்தித்தன.இதன் தாக்கத்தால் நேற்று, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஸ்திரமாக உள்ளது. அதனால், எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எனினும், ரூபாய் மதிப்பின் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால், இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.
அச்சம் வேண்டாம்
இது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்து விடும், என்பது தான் கவலை அளிக்கிறது.இந்த பிரச்னையை சமாளிப்பதற்கும், மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. உரிய நேரத்தில், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதர நாடுகளின் பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஸ்திரமான நிலையில் உள்ளது.வரும் நாட்களில், கச்சா எண்ணெய் விலை குறைவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. அதனால், ரூபாய் மதிப்பு, சரிவில் இருந்து மீளும். கச்சா எண்ணெய் விலை, 79 –- 85 டாலருக்குள் நிலைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய நிலை ஏற்பட்டால், ரூபாய் வெளி மதிப்பு உயரும்.
நம்மிடம், நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க, போதுமான அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது; பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் பொருளாதார கட்டமைப்பும் வலுவாக உள்ளது. அதனால், நிதிச் சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் குறித்து கவலை கொள்ள தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அருண் ஜெட்லியின் துணிச்சல்
உலகின் நம்பர் 1 பொருளாதார நாடு என்ற இடத்தை பிடிக்க முடியாமல் போனாலும், முதல் மூன்று நாடுகளுள் ஒன்றாக, இந்தியா முன்னேறும்.இந்தியா, குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு, பல்வேறு அம்சங்கள் துணையாக உள்ளன. மத்திய அரசு, சிறப்பான சீர்திருத்தங்களை செய்து வருகிறது.
குறிப்பாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திடமுடன் செயல்பட்டு, மிகுந்த தீர்க்கமுடன், துணிச்சலாக, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தியுள்ளார். அதனால் ஏற்பட்டுள்ள எளிமையான வரி நடைமுறைகளின் பயன்களை நாம் காண்கிறோம்.திவால் சட்டமும், குறிப்பிடத்தக்க சீர்திருத்த நடவடிக்கை எனலாம். விரைவில், நிலம் மற்றும் தொழிலாளர் துறைகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என, நம்புகிறேன். அதேசமயம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சில இடர்ப்பாடுகளும் உள்ளன.
குறிப்பாக, இந்தியா, கச்சா எண்ணெய் தேவைக்கு, வெளிநாடுகளை சார்ந்து உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, பொருளாதார வளர்ச்சிக்கு இடர்ப்பாடாக இருக்கும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்டினா லகார்டு, தலைவர், பன்னாட்டு நிதியம்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|