பதிவு செய்த நாள்
15 அக்2018
00:04
ஆட்சித் தலைமையும், நிதித்துறை தலைமையும் மோதிக்கொள்வது, வரலாற்றில் மிகவும் சகஜம். இப்போது,அமெரிக்காவிலும், இந்தியாவிலும், இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இரண்டிலும் அணுகுமுறையில் பெரியவித்தியாசம் இருக்கிறது. இந்த அணுகுமுறை வித்தியாசம் தான், நம் கவனத்தைக் கவர்கிறது.
என்ன வித்தியாசம் அது?
அமெரிக்கா கிடுகிடுவென வளர்ந்து வருகிறது. அதிபர் டொனால்டு டிரம்பின் அதிர்ஷ்டமா, அவர் மேற்கொண்ட, ‘அமெரிக்காவே முதல்’ என்ற அணுகுமுறையின் வெற்றியா, சீனாவோடு போடும் வர்த்தகப் போர் குஸ்தியா அல்லது வழக்கமான ஒரு சுழற்சியின் பலனா... என, தெரியவில்லை.
ஆனால், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்கிறது.உடனே, அமெரிக்காவில் இருந்து வெளியே போய் முதலீடு செய்தவர்கள் எல்லாம், மீண்டும் சொந்த மண்ணை நோக்கித் திரும்பிக்கொண்டு இருக்கின்றனர்.இதனால், வளரும் நாடுகள் உட்பட, பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. முதலீட்டை உருவிக்கொண்டு போனால், தொழிலும் வர்த்தகமும் ஆட்டம் காணத்தானே செய்யும்!
வளர்ச்சி தனியாக வராது, பணவீக்கம் என்ற மனைவியோடு தான் வரும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, உள்ளூர் வட்டிவிகிதங்களை உயர்த்த வேண்டும். அப்போது தான் வளர்ச்சியின் பயன்கள், மக்களை சென்று அடையும். பணம் நிறைய இருக்கிறது; ஆனால், அதற்கு மதிப்பே இல்லை என்றால், யார் அந்தப் பணத்தை மதிப்பர்?
அமெரிக்க மத்திய வங்கியான, பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருப்பவர், ஜெரோம் போவல். இவர், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு, தொடர்ச்சியாக அமெரிக்க வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறார். தற்போது அது, 2 முதல், 2.25 சதவீதம் வரை உள்ளது. இன்னும் இரண்டு முறை, 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி உயர்வை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.உடனே, பங்குச் சந்தைக்குப் பற்றிக்கொண்டுவிட்டது.
அமெரிக்கப் பங்குச் சந்தையில், 2.06 சதவீதம் சரிவு. எல்லாரும் குய்யோ முறையோ, என்று கூவ ஆரம்பித்துவிட்டனர்.இன்னொரு பக்கம், நவம்பர் மாதத்தில் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இதை அவர்கள், ‘மிட்டர்ம் எலக் ஷன்’ என்று அழைப்பர்.ஒரு அதிபரின் நான்கு ஆண்டு பதவிக்காலத்தில், மிகச் சரியாக இரண்டாம் ஆண்டு முடிவில், மிட்டர்ம் தேர்தல் நடத்தப்படும்.
அதிபர் மீது நம்பிக்கை தொடர்கிறதா... என்று சீர்தூக்கிப் பார்க்கும் முக்கிய தேர்தல் இது.இப்படிப்பட்ட முக்கியமான தருணத்தில், பங்குச் சந்தை வீழ்ந்தால், டொனால்டு டிரம்ப் அதிர்ந்து போகாமல் என்ன செய்வார்?
வளர்ச்சிக்கு சொந்தம் கொண்டாடியவர், வீழ்ச்சி வரும்போது ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகிறார்.அவ்வளவு தான், பெடரல் ரிசர்வ் தலைவர்போவலை, காய்ச்சி எடுத்துவிட்டார். அவரது வட்டி விகித உயர்வு அணுகுமுறை முற்றிலும் தவறு; தனக்குப் பொருளாதாரமும் தெரியும் என்றெல்லாம் விளாசித் தள்ளியுள்ளார்.இவரது கடும் விமர்சனங்கள், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஒருவேளை பெடரல் ரிசர்வ் தலைவரை, டிரம்ப் வீட்டுக்கு அனுப்பி விடுவாரோ... என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வளைய வருகின்றன.ஆனால், ஜெரோம் போவல் சமத்துப் பிள்ளை யாக (வேறு வழி?) எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் சமாளித்து வருகிறார்.
இந்தியாவுக்கு வாருங்கள்...
உர்ஜித் படேல், நம்ம ரிசர்வ் வங்கியின் தலைவர். வெளிநாட்டில் படித்து, பட்டம் பெற்று, பொருளாதாரம் நன்கு தெரிந்த மூத்த அதிகாரிகளில், இவரும் ஒருவர்.கச்சா எண்ணெய் விலையேற்றம், நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதியில் சுணக்கம் என்று, திரும்பின திசையெல்லாம் இம்சைகள் தான்.
இவரும் வளர்ச்சியை கவனத்தில் வைத்து, படிப்படியாக வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறார். சமீபத்திய நிதிக்குழு சந்திப்பில், எல்லாரும், 0.25 சதவீதமாவது வட்டி உயர்த்தப் படும் என, எதிர்பார்த்தனர். ஆனால், வட்டியை உயர்த்தாமல், அமைதி காத்து விட்டார் உர்ஜித் படேல்.இது, என்ன உத்தி, தவறான உத்தி என, பங்குச் சந்தை உர்ஜித்துக்கு, சிவப்பால் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இங்கும் அமெரிக்கா போன்ற புகைச்சல் தான். அரசு என்னவெல்லாமோ செய்ய விரும்புகிறது. ஆனால் பாருங்கள், இந்த, ஆர்.பி.ஐ., தலைவர் என்பவர் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேன் என்கிறார். இவர் வேறொரு திசையில் சிந்திக்கிறார். இவரை எப்படி அனுமதிப்பது? என்றெல்லாம்விமர்சனங்கள் ஏராளம்.ரூபாயின் மதிப்பு சரிவைத் தடுத்து நிறுத்த, உர்ஜித் ஒன்றுமே செய்யவில்லை என்ற குறையும் உண்டு.மக்கள் மத்தியில் பெருகி வரும் அதிருப்தியை உணர்ந்த மத்திய அரசு, தானே தலையிட்டு, பெட்ரோல், டீசல் விலையில் இரண்டரை ரூபாயைக் குறைத்து, மாநில அரசுகளை இன்னொரு இரண்டரை ரூபாயைக் குறைக்கச் சொன்னது.
நம் கச்சா எண்ணெய் இறக்குமதியை, 2022க்குள், 10 சதவீதமாவது குறைக்க வேண்டும் என, பிரதமர் தலைமையில் நடைபெற்ற சமீபத்திய கூட்டத்தில், முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றால், உர்ஜித் செய்ய வேண்டிய வேலைகளை, நாங்கள் வேறு வழியில் இழுத்துப் போட்டு செய்கிறோம் என்பதே.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மாதிரி இங்கே பிரதமர் மோடி, உர்ஜித் மீது பாயவில்லை; வார்த்தைகளால் காய்ச்சி எடுக்கவில்லை. ஆனால், ஆட்சித் தலைமையும், நிதித் தலைமையும், ஒரே சிந்தனையைக் கொண்டிருக்கவில்லைஎன்பது மட்டும் நிஜம்.ஆனால், இது பிழையல்ல.
பெடரல் ரிசர்வ் வங்கியைப் போல், ஆர்.பி.ஐ.,யும் சுயேச்சையான அமைப்பு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, ஆட்சித் தலைமைக்கு இருக்கும் அதே அக்கறை, நிதித் தலைமைக்கும் இருக்கும்.நிதித் துறை தலைவர் கள், ஆட்சித் தலைவர்கள் போல் வெளிப்படையாகப் பேச முடியாது, பேசவும் கூடாது. ஆனால், தங்கள் அக்கறையை, தங்கள் நேர்மையை, தங்கள் அணுகு முறையில் காட்ட வேண்டும்.
பாராட்டை விட விமர்சனமே நேர்மையானது. சரியான திசையில் தான் போய் கொண்டு இருக்கிறோம் என்பதற்கு விமர்சனமே, அத்தாட்சி. ஜெரோம் போவலும், உர்ஜித்தும் விமர்சிக்கப்படுகின்றனர். அப்படியானால், அவர்கள் செல்லும் பாதை சரியாகத் தானே இருக்க வேண்டும்?
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|