பதிவு செய்த நாள்
05 நவ2018
00:47
கார் விற்பனை, இருசக்கர வாகன விற்பனை இரண்டு மாதங்களில் கடுமையாக சரிந்துள்ளது.
ஏன் இந்தச் சரிவு? இதனை எப்படி புரிந்து கொள்வது?
ஒரு
மனிதர் இருசக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ
வைத்திருப்பது, பல செய்திகளைச் சொல்லும். தேவை கருதி, ஒருவர்
வாகனம் வைத்திருப்பது இயல்பானது. ஆனால், அதற்கான நிதி எங்கிருந்து
வருகிறது, எப்படி வருகிறது என்பதில் தான், பொருளாதாரம்
அடங்கியிருக்கிறது.
மொத்த பணத்தையும் கொடுத்து, கார்
வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒருசில பணக்காரர்கள்
வேண்டுமானால், தங்கள் நிறுவனத்தின் பெயரால் முன்பணம் கொடுத்து
கார் வாங்கலாம்.பெரும்பாலோர், வங்கிக் கடன் அல்லது வங்கிசாரா
நிதி நிறுவனக் கடனில் தான் கார் வாங்குகின்றனர். டூ -– வீலர்
வாங்குபவர்களுக்கும், இது பொருந்தும்.
கையில் முழு மூலதனம்
இல்லாமல், மாதத் தவணை கட்டிக்கொண்டு, வாகனம் வாங்குவதற்கு
துணிச்சல் வேண்டும். அதாவது, நிரந்தர வேலை இருக்க வேண்டும். வருவாயில் மிச்சம் பிடிக்க வாய்ப்பு இருக்கவேண்டும். அல்லது ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியை, மாதத் தவணையாக கட்டுவதற்கு ஒதுக்கக்கூடிய அளவுக்கேனும் வருவாய் இருக்க வேண்டும்.
இதற்கு மேல், அந்த வாகனத்துக்கு பெட்ரோல் அல்லது டீசல் ஊற்றி, பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக்கொண்டு, பார்க்கிங் கட்டணம் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இது, மாதாமாதம் தொடரும் செலவு. இதனை மேற்கொள்வதற்கும், போதுமான அளவு வருவாய் இருக்க வேண்டும்.
இப்படியெல்லாம்
செய்து, பெருமைமிகு கார் ஓனர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் பெருகி வருகிறது. இதுவே சுபிட்சத்தின் அடையாளமாக,
வளர்ச்சியின் சின்னமாக புரிந்துகொள்ளப்படுகிறது. இதன்மூலம், பல்வேறு நிலைகளில் நேரடியாகவும்,
மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் பெருகுவதால், வளர்ச்சிக்
குறியீடுகளில், கார் விற்பனையும் ஓர் அங்கமாக இருக்கிறது.
இந்தியாவில்
பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட
தருணங்களில், எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்களை
முன்வைத்தன.தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று
கூறப்பட்டது. இதற்கு மறுப்பு வாதமாக முன்வைக்கப்பட்ட விஷயம்,
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் தொடர் விற்பனை வளர்ச்சி தான்.
இந்த நிலை, கடந்த இரண்டு மாதங்களில் திடீரென மாறியுள்ளது தான், கவலை ரேகையை
ஏற்படுத்தியுள்ளது.பண்டிகை
காலங்களில்தான் வாகன விற்பனை அதிகரிக்கும். முகவர்கள், கூடுதல்
எண்ணிக்கையில் வாகனங்களை தருவித்து வைத்திருப்பர். கூடுதல்
சலுகைகளையும், கவர்ச்சிகரமான பரிசுகளையும்,
வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குவர்.
செப்டம்பரில்
தொடங்கிய இந்த ஆண்டுக்கான பண்டிகை காலம், அவ்வளவு சுரத்தாக
இல்லை. செப்டம்பர் மாதத்தில் விற்பனையில், 5.5 சதவீத சரிவு
ஏற்பட்டது.இது, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத சரிவு. பின்னர் அக்டோபரிலும் இதே நிலைமை.மாருதி
சுசூகி நிறுவனம், அக்டோபரில் 1.46 லட்சம் கார்களை விற்பனை
செய்தது. அதற்கு முந்தைய மாதத்தோடு ஒப்பிடும்போது, விற்பனை, 0.2
சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இதேபோல், பிற கார் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையும், பெரும் நம்பிக்கையைத் தருவதாக இல்லை.விற்பனை
ஒரு அளவுகோல் என்றால், வாகனப் பதிவு இன்னொரு அளவுகோல். மத்திய
அரசு, வாகனப் பதிவுகளுக்கு என்று, ‘வாஹன்’ என்றொரு வலைத்தளத்தை
வைத்திருக்கிறது.அதிலிருந்து, திரட்டப்பட்ட தகவல், இன்னும் ஆச்சரியமளிக்கிறது.
செம்டம்பர்
மாதத்தோடு ஒப்பிடும்போது, அக்டோபர் மாதத்தில் இந்தியாவில்
நடைபெற்ற வாகனப் பதிவுகள், 17 சதவீதம் குறைவு. சென்ற ஆண்டு, இதே
மாதத்தோடு ஒப்பிடும்போது, வாகனப் பதிவுகள், 35 சதவீதம் வரை குறைவு.தசரா மற்றும் துர்கா பூஜை சமயத்தில் தான்,
வாகனப் பதிவு அதிகரிக்கும். ஆனால், இம்முறை சரிந்துள்ளது. அதில், முன்னணியில் இருப்பது குஜராத். அங்கே, 85 சதவீதம் சரிவு.
அதைத்
தொடர்ந்து மேற்கு வங்கத்தில், 37; உத்தரப் பிரதேசத்தில், 23;
ஹரியானாவில், 22; மஹாராஷ்டிராவில், 13 சதவீதம் சரிவு. புதிய
பதிவுகள் உயர்ந்த ஒரே பகுதி புதுடில்லி மட்டுமே. 2.7 சதவீதம்
உயர்ந்துள்ளது.முதற்காரணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
நாடெங்கிலும் மக்கள் விலை உயர்வை கண்டு அஞ்சுகின்றனர். அதனால்,
வாகனங்கள் வாங்குவதை ஒத்திப் போட்டிருக்கின்றனர்.
இரண்டாவது
முக்கிய காரணம், வாகன காப்பீட்டுத் தொகை உயர்ந்தது. இருசக்கர வாகன
விலையில், 10 சதவீதம் வரை, காப்பீட்டுத் தொகை உயர்ந்துள்ளது. கார் காப்பீட்டிலோ, கட்டணம் இருமடங்காகியுள்ளது. இது வாகனம் வாங்கும் செலவைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.கேரளத்தில் பெருமழை ஏற்பட்டதால், அங்கே விற்பனை சரிவு.
மேற்கு
வங்கத்திலோ, ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களுக்கு இருசக்கர
வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கே இருசக்கர வாகன விற்பனை குறைந்துள்ளது.மொத்தத்தில், இருசக்கர வாகன பதிவில், 20 முதல், 25 சதவீத சரிவும், கார் பதிவில், 10 முதல், 17 சதவீத சரிவும் காணப்படுகிறது.
வாகன
விற்பனையில் பல இடங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுவாக,
விற்பனை முகவர்கள், 5 முதல், 15 நாள் வரையான ஸ்டாக்கைத்தான்
கையிருப்பு வைத்திருப்பர்.
ஆனால், தொடர்ச்சியாக, சில
மாதங்களாக, பல முகவர்கள், 45 நாள் வரையிலான ஸ்டாக்கை
வைத்திருக்கின்றனர். இது முகவர்கள் மத்தியில், பெரும் நிதி
அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களோடு
சேர்ந்து கார்களை சரசரவென்று விற்ற காலம் ஒன்று உண்டு. இப்போது,
அங்கேயும் தேக்கம். புதிய கார்களை வாங்க அங்கேயும் தயக்கம்.
இவையெல்லாம்
உணர்த்துவது ஒன்று தான். பொருளாதார சுழற்சியில் எங்கோ சிக்கல்.
மக்கள் துணிந்து புதிய பைக்குகளையோ, கார்களையோ வாங்கத்
தயங்குகின்றனர்.
தேவையைத் தாண்டி, கையில் உபரி காசு புரண்டு,
மனதளவில் சுபிட்சமாக உணரும்போது தான், இத்தகைய ஆடம்பரச்
செலவுகளைச் செய்ய மக்கள் முன்வருவர். நடுத்தர மக்களின் கார் கனவு கைநழுவுகிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை.
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|