பதிவு செய்த நாள்
18 டிச2018
07:01
புதுடில்லி: வங்கிகள், நவீன மின்னணு தொழில்நுட்பத்திலான நிதி சேவைகளுக்கு மாறி வருவதால், அப்பணிகளுக்கு, ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.இது குறித்து, வலைதள வேலைவாய்ப்பு நிறுவனமான, ‘டீம் லீஸ் சர்வீசஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்திய வங்கி துறை, மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த நிதி சேவைகளுக்கு வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப, புதிய வங்கி நடைமுறைகள் அறிமுகமாகி வருகின்றன.இதையொட்டி, வங்கிகள், பல்வேறு பிரிவுகளில், வல்லுனர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளன.பொது துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, கனரா பேங்க், சிண்டிகேட் பேங்க் ஆகியவை, நடப்பு நிதியாண்டில், ஒரு லட்சம் பேரை நியமிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இரு மடங்குகடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்வங்கிகள், அலுவலர், நிர்வாக பயிற்சியாளர்கள், உதவி மேலாளர்கள் போன்ற பணியிடங்களுக்கு, 95 ஆயிரம் பேரை நியமித்தன.தற்போது, சொத்து மேலாண்மை, ஆய்வு, திட்டம், மின்னணு தொழில்நுட்பம், நுகர்வோர் சேவைகள் போன்ற பிரிவுகளில் திறமையான வல்லுனர்களை நியமித்து வருகின்றன.இந்த வகையில், நடப்பு நிதியாண்டில், இவ்வங்கிகளின் பணி நியமனம், இரு மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ., தவிர்த்து, இதர வங்கிகளின் மொத்த ஊழியர்களில், 20 சதவீதம் பேர் தான், அலுவலர்கள் பிரிவில் உள்ளனர். இது, எஸ்.பி.ஐ.,யில், 45 சதவீதமாக உள்ளது.தனியார் துறைதனியார் வங்கிகள், போட்டியை சமாளித்து, வளர்ச்சி காண, ஊழியர்களுக்கு திட்ட இலக்கு நிர்ணயிக்கின்றன. இதை பின்பற்றி, பொது துறை வங்கிகளும், தனியார் நிதி துறையைச் சேர்ந்த வல்லுனர்களை, அதிக ஊதியத்தில் பணிக்கு அமர்த்தி வருகின்றன.தலைமை நிர்வாக நற்பணி அதிகாரி, தலைமை முதலீட்டு அதிகாரி, தலைமை ஆய்வாளர், மின்னணு சந்தை அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு, ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குகின்றன.நடப்பு நிதியாண்டில், சிண்டிகேட் பேங்க், வாராக் கடன் மீட்பு, மின்னணு சந்தை ஆகிய புதிய பிரிவுகளில், 500 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது.பேங்க் ஆப் பரோடா, சொத்து நிர்வாக பிரிவில், 500 பேரை பணியமர்த்த உள்ளது. வாராக் கடன் மீட்புக்காக, வங்கிகளில், சட்ட வல்லுனர்களுக்கான பணி வாய்ப்பும் அதிகரித்துள்ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, வரும் மாதங்களில், புதியவர்கள் தவிர்த்து, அனுபவமுள்ள, 5,000 பேரை பணியமர்த்த உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பொது துறை வங்கிகள், வாராக்கடன் பிரச்னையில் இருந்து, மெல்ல மீண்டு வருகின்றன. புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை பின்பற்றும், தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகளுக்கு இணையாக, பொது துறை வங்கிகள், அவற்றின் வர்த்தக நடைமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதனால், அவ்வங்கிகளில் பணி வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இது, குறிப்பிட்டகாலத்திற்கு பின், நல்ல பலனை கொடுக்கும்சப்யாசாச்சி சக்ரவர்த்தி தலைவர், வங்கி சேவை, டீம் லீஸ் சர்வீசஸ்சிண்டிகேட் வங்கிக்கு, மின்னணு சந்தை, வாராக்கடன் மீட்பு போன்ற பிரிவுகளில், தேர்ச்சி பெற்ற புதிய வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். முதல் மூன்று துவக்க நிலை பணியாளர்களுக்கு, தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவுகளில், பணியாளர் தேவை உயர்ந்து வருவதால், அவர்களுக்கான சராசரி வயது வரம்பும் குறைந்துள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன், 46.5 ஆக இருந்த, புதிய பணியாளர்களின் சராசரி வயது, தற்போது, 37 ஆக குறைந்துள்ளது.மிருத்யுஞ்ஜய் மஹாபத்ராதலைமை செயல் அதிகாரி, சிண்டிகேட் பேங்க்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|