பதிவு செய்த நாள்
19 டிச2018
23:15
அவிநாசி : தமிழகத்தில், பருவ மழை கை கொடுத்ததால், பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், அவிநாசியில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரே நாளில், 2,000 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ஈரோடு மாவட்டம் தாராபுரம், சத்தி உட்பட பல இடங்களில், அதிகளவு விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். பொதுவாக, டிச., -– பிப்., மாதம், பருத்தி சீசன் களைகட்டும். இப்பகுதிகளில் விளையும் பருத்தி, அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் திங்களன்று நடக்கும் ஏலத்தில் விற்கப்படும்.
இந்தாண்டு வழக்கத்துக்கும் மாறாக, பருத்தி விளைச்சல் அதிகரித்து உள்ளது. நேற்றைய ஏலத்துக்கு, 2,000 மூட்டை பருத்தியை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 40 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
விவசாயிகள் கூறுகையில், ‘கடந்தாண்டு பருவ மழை கை கொடுத்தது. தற்போது, பனிப்பொழிவும், ஈரப்பதமும் அதிகளவில் இருப்பதால், பருத்திக் காயில் விரைவில் வெடிப்பு ஏற்படுகிறது.‘எனவே, விவசாயிகள் சாகுபடியை துவக்கியுள்ளனர். கடந்தாண்டு, குவின்டாலுக்கு, 4,000 முதல், 4,200 ரூபாய் மட்டுமே விலை கிடைத்த நிலையில், இந்தாண்டு, 5,000 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கிறது’ என்றனர்.
கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘இந்த சீசனில், திருப்பூர் அவிநாசி, சேவூர், கருவலுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து, அதிகளவு விவசாயிகள் பருத்தி கொண்டு வருகின்றனர். ‘கடந்தாண்டு சீசனை விட, இந்தாண்டு, 20 சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. கடந்தாண்டு, இதே சீசனில், 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது; இம்முறை, 15 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|