பதிவு செய்த நாள்
05 பிப்2019
00:13
புதுடில்லி:‘‘மாநில வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கும் அதிகாரத்தை, ‘நிடி ஆயோக்’ அமைப்பிற்கு வழங்குவது தொடர்பாக, ௧5வது நிதிக் குழுவுடன் பரிசீலிக்கப்படும்,’’ என, நிடி ஆயோக் துணை தலைவர், ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த, 1950, மார்ச், 15ல், அப்போதைய பிரதமர், நேரு தலைமையில், தேசிய திட்டக் குழு துவக்கப்பட்டது.இக்குழு, நாட்டின் பொருளாதாரம், உற்பத்தி ஆகியவற்றை உயர்த்துவதற்கான, ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து, அவற்றுக்கு, மத்திய, மாநில அரசுகளின் செலவினங்களை முடிவு செய்வதில், முக்கிய பங்கு வகித்தது.
இரு பிரிவுகள்
இந்நிலையில், மத்திய அரசு, 2015, ஜன., 1ல், திட்டக் குழுவுக்கு பதிலாக, மாநில வளர்ச்சிக்கான கொள்கை திட்டங்களை உருவாக்கித் தரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பை ஏற்படுத்தியது.இது, மத்திய அரசு திட்டங்கள், சமூக பாதுகாப்பு தொடர்பாக, மாநில அரசுகளின் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தும் திட்டங்கள் என, இரு பிரிவுகளின் கீழ், கொள்கைகளை வகுத்து தரும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பிற்கு, திட்டக் குழுவிற்கு இருந்தது போன்ற, மாநிலங்களுக்கு ஏற்ப, வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை.அதனால், ‘கூடுதல் அதிகாரங்களுடன், ‘நிடி ஆயோக் 2.0’ அமைப்பை உருவாக்கலாம்’ என, மத்திய நிதிக் குழு முன்னாள் தலைவர், விஜய் கேல்கர், சமீபத்தில் யோசனை தெரிவித்திருந்தார்.
புதிய நிடிஆயோக் அமைப்பிற்கு, நிதி ஒதுக்கும் அதிகாரம் வழங்கினால், பின்தங்கிய மாநிலங்கள் வளர்ச்சி காண வழி ஏற்படும். பிராந்திய அளவில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கும், முன்னேறி வரும் மாநிலங்களுக்கும் இடையிலான, ஏற்றத் தாழ்வு குறையும் என, கேல்கர் கூறியிருந்தார்.
சரியான தருணம்
இது குறித்து, நிடி ஆயோக் துணை தலைவர், ராஜீவ் குமார் கூறியதாவது:நிதித் துறை செயலர், நிதிக் குழு தலைவர் என, நீண்ட கால அனுபவம் உள்ள, விஜய் கேல்கர் தெரிவித்த கருத்து பரிசீலிக்கப்படும்.வளர்ச்சி திட்டங்களுக்காக, மாநில அரசுகளுக்கு சுதந்திரமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம் தான்.
இது, மாநில அரசுகள் இடையேயான கூட்டுறவை மேம்படுத்தும் என்பதுடன், கூட்டாட்சி தத்துவத்தில், போட்டித் தன்மையை அதிகரித்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.தேசிய அளவில் முழுமையான நிதி வளத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, மாநிலங்கள் இடையே, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, உரிய நிதி ஒதுக்கீடு செய்து, சம வளர்ச்சி காண்பதற்கான முயற்சிக்கு உகந்த தருணம் இது, என கருதுகிறேன்.
இதனால், தற்போது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பலவீனமாக உள்ள மாநிலங்கள் கூட, முன்னேறிய மாநிலங்களுடன் சேர்ந்து வளர்ச்சி காண முடியும்.விஜய் கேல்கரின் யோசனை குறித்து, 15வது நிதிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு, திட்டக் குழுவை கலைத்து, நிடி ஆயோக் மூலம், ஏராளமான திட்டங்களை துவக்கியது. எனினும், அத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான, நிதி ஒதுக்கும் அதிகாரம், மத்திய நிதியமைச்சகம் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் தான் உள்ளது. அதனால், நிடி ஆயோக்கிற்கு, நிதி ஒதுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்பது சரியே.யோகிந்தர் அலக், முன்னாள் மத்திய அமைச்சர், பொருளாதார வல்லுனர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|