பதிவு செய்த நாள்
13 பிப்2019
23:52
மும்பை:சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் கழிவில் இருந்து தயாரிக்கும் உயிரி எரிபொருளை, உயிரி டீசலில் கலக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல், டீசலில், உயிரி எரிபொருள் கலப்பதை ஊக்குவிக்கிறது.தற்போது, பெட்ரோலில், சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கப்படும், உயிரி எரிபொருளான எத்தனால், 3 -– 5 சதவீதம் கலக்கப்படுகிறது.
எத்தனால்
இதை, 2022ல், 10 சதவீதமாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், எத்தனால் உற்பத்தி போதுமான அளவிற்கு இல்லாததால், மாற்று உயிரி எரிபொருள் பயன்பாடு குறித்து ஆராயப்படுகிறது.இந்நிலையில், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த, முன்சர் பாரத் நிறுவனம், மஹாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகே, நெருல் என்ற இடத்தில், சமையலுக்கு பயன்படுத்திய பின் சேகரமாகும் எண்ணெய் கழிவு மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
இங்கு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான். உயிரி எரிபொருள் உற்பத்தியை துவக்கி வைத்து பேசியதாவது:வரும், 2030ல், டீசலுடன், 5 சதவீதம் உயிரி டீசல் கலப்பதை கட்டாயமாக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கிடைப்பது சவாலாக உள்ளது.
இந்நிலையில்,சமையல் எண்ணெய் கழிவில் இருந்து,உயிரி எரிபொருள் தயாரிக்கும் தொழில் நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இது, உயிரி எரிபொருளுக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க உதவும்.
பரிசீலனை
சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் கழிவின் நச்சுத்தன்மை குறித்து தெரியும். அதே சமயம், அதை, உயிரி டீசலுக்கான மூலப்பொருளாக பயன் படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆகவே, சமையல் எண்ணெய் கழிவில் இருந்து பெறப்படும் உயிரி எரிபொருளை, மேம்படுத்தப்பட்ட உயிரி எரிபொருளாக வகைபடுத்தி, உயிரி டீசலுடன் கலப்பதை கட்டாயமாக்கலாம். இது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில், சமைக்கப்பட்ட எண்ணெய் பயன்பாடு குறித்த விதிமுறைகள் உள்ளன. அவற்றை, நம் நாட்டிலும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம், உயிரி டீசல் தயாரிப்பிற்கு, 20 லட்சம் டன் சமையல் எண்ணெய் கழிவு கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, மத்திய அரசு, மேம்படுத்தப்பட்ட உயிரி எரிபொருள் தயாரிப்பு நிறுவனங்களிடம், 100 சதவீத கொள்முதலுக்கு, உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், சமையல் எண்ணெய் கழிவில் தயாரிக்கும் உயிரிஎரிபொருளுக்கு, மேம்படுத்தப்பட்ட உயிரி எரிபொருள் அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில், கலப்பு எரிபொருள் இலக்கு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|