பதிவு செய்த நாள்
22 ஏப்2019
00:05
‘பிக்ஸட் மெச்சுரிட்டி பிளான்’ எனப்படும், எப்.எம்.பி., நிதிகளில், சில பணத்தை திரும்பி தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முதலீட்டின் தன்மையை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் ஆர்வம் உள்ளவர்கள், எப்.எம்.பி., எனப்படும், ’பிக்ஸட் மெச்சுரிட்டி பிளான்’ நிதிகளில் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் குறித்து கவலை அடைந்திருக்கலாம். இந்த வகை நிதிகள் சில, முதிர்வு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு முழு பணத்தை திரும்பி செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பொதுவாக இந்த வகை நிதிகள், வைப்பு நிதிக்கு மாற்றான வரி சேமிப்பு பலன் அளிக்கும் முதலீடாக முன்வைக்கப்படுகின்றன.எப்.எம்.பி., நிதிகள் மியூச்சுவல் பண்ட்களில் ஒரு வகையாகும். கடன்சார் நிதிகளில் ஒன்றான இவை, ஒரு மாதம் முதல், ஐந்து ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்டவை. இடையே விலக்கி கொள்ள முடியாத குளோஸ்ட் பண்ட் நிதி வகையாக அமைகின்றன. இந்த நிதிகள், வைப்பு நிதி சான்றிதழ்கள், பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து, பலனை முதலீட்டாளர்களுக்கு முதிர்வு காலத்தில் அளிக்கின்றன.
இந்த நிதிகள் முதலீடு செய்து காத்திருப்பதால், வட்டி விகித ரிஸ்க் கிடையாது. ஆனால் கிரெடிட் ரிஸ்க் உண்டு. மேலும் முதலீடு செய்த நிறுவனங்கள், பணத்தை திரும்பி அளிக்கத்தவறினால், முதலீட்டை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.தற்போது, எப்.எம்.பி., நிதி திட்டங்களில் சில சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. ‘ஜீ’ குழுமத்தில் முதலீடு செய்திருந்த நிதிகள் சில, அந்த தொகையை திரும்ப பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், முதிர்வு காலத்தை நெருங்கிய முதலீட்டாளர்களுக்கு முழுத்தொகையும் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடக் எம்.எப்.,பி-ன் நிதிகள் உள்ளிட்ட சில நிதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்களுக்கு ஒன்று குறைவான தொகை கிடைக்கலாம் அல்லது முதிர்வு காலம் நீட்டிக்கப்படலாம்.இந்நிலையில், எப்.எம்.பி., முதலீடுகள் ஏற்றவையா எனும் சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு உண்டாகியுள்ளது. இந்த நிதிகள் ரிஸ்க் கொண்டவை என்பது இப்போது உணர்த்தப்பட்டுள்ளதே தவிர, இதன் காரணமாகவே இவற்றை ஒதுக்கிவிட முடியாது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். முதலீடு செய்யும் போதே இவற்றின் ரிஸ்க் அம்சத்தையும் முதலீட்டாளர்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். வைப்பு நிதிகளுக்கு மாற்றாக அமைந்தாலும், இவை ரிஸ்க் இல்லாதவையும் அல்ல, உத்தரவாத பலனை அளிப்பவையும் அல்ல என சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வகை நிதிகளை தேர்வு செய்யும் போது முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடு காலத்திற்கு ஏற்ப கால அளவு கொண்ட நிதியை நாடுவதும், இடையே தேவைப்படாத தொகையை மட்டுமே முதலீடு செய்வதும் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். இதன் மூலம் பணமாக்கம் தொடர்பான ரிஸ்கை சமாளிக்கலாம். மேலும், நிதிகளின் முதலீடு தொகுப்பில் உள்ள நிதி சாதனங்களின் தரம் மற்றும் நிதியின் கடந்த கால செயல்பாடுகளும் கவனிக்க வேண்டிய அம்சங்களாகும்.
பட்டியலிடப்படாத நிறுவனங்கள், தனியார் சமபங்குகள் போன்றவற்றில் அதிக முதலீடு உள்ளனவா? என்றும் பார்க்க வேண்டும். பொதுவாக, முதலீட்டின் தன்மை மற்றும் ரிஸ்க் அம்சங்களை நன்கு புரிந்து கொண்டுள்ள நிலையில் மட்டுமே இவை ஏற்றதாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|