பதிவு செய்த நாள்
01 ஜூன்2019
06:47
‘‘ஐ.ஓ.பி., எனும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாராக் கடனின் அளவை, 21 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாகக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது,’’ என, இதன் நிர்வாக இயக்குனர், ஆர்.சுப்ரமணிய குமார் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: வங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக, நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பெரு நிறுவனங்களுக்கு அதிகம் கடன் வழங்கியது; அவற்றுக்கு வழங்கப்பட்ட கடனின் அளவு மட்டும், 60 சதவீதம் வரை இருந்தது.
இது தற்போது, 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு, கடன் வழங்கும் அளவை அதிகரித்து உள்ளோம். கடந்த ஆண்டை விட, வாராக் கடனின் அளவு, 25 சதவீதத்திலிருந்து, 21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அளவை, 12 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 33 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் உள்ளது. இதில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை, இந்த ஆண்டு வசூலிக்கப்பட உள்ளது.
இது தவிர்த்து, கல்விக் கடன், விவசாயக் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வட்டி இல்லாமல், அசலை மட்டும் அவர்கள் செலுத்தலாம். இதனால், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நஷ்டத்திலிருந்து, லாபத்திற்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, சுப்ரமணியகுமார் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|