பதிவு செய்த நாள்
26 ஆக2019
05:56
கடந்த ஓராண்டாகவே, பொருளாதார வல்லுனர்களும், அன்னிய முதலீட்டாளர்களும், தொழில் துறை முதலாளிகளும், சிறு, குறு, நடுத்தர தொழிலக கூட்டமைப்புகளும் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும், நிதி அமைச்சர் காதுகளில் விழுந்து விட்டன.
அவர்கள் கேட்ட அத்தனை சலுகைகளையும், மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்து கொடுப்பதாக அறிவித்துவிட்டார்.முனைப்பு முக்கியம்பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கான ஆரம்பமாக இதைப் பார்க்கலாம்.
இன்னொரு வகையில், மக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.இப்போதைக்கு, நிதி அமைச்சர் ஒருசில துருப்புச் சீட்டுகளை மட்டுமே இறக்கியிருப்பதாகவும் கருதலாம்.இன்றைக்கு, இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்புகள், தொழிலில் தொய்வு, முதலீட்டில் சரிவு ஆகியவற்றுக்கான காரணங்கள் என்னென்ன என்பதை அலசி, ஆராய்ந்த பின்னரே, நிதி அமைச்சர், இந்த முடிவுகளை எடுத்திருப்பதாக கருத வேண்டும்.இதுநாள் வரை எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்பதை, அவர் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருக்கலாம். அதனால், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும் என்று, அவர் காட்டும் முனைப்பும், நடவடிக்கைகளும் இங்கே கவனிக்கத்தக்கது.விளக்கம்இனிமேல் வாரம் ஒருமுறை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர். அதுதான் மிகவும் முக்கியமானது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியும், பலன்களும், பொதுமக்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்குகிறேன் என்றார், நிதி அமைச்சர். அது நடைபெற்றதா, ஒவ்வொரு பொதுத் துறை வங்கிக்கும், எவ்வளவு மறுமுதலீட்டுத் தொகை வழங்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதன் பலனை, பொதுமக்களுக்கு வழங்க, வங்கிகள் முடிவு செய்திருக்கின்றன என்றார் அமைச்சர். அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் என்ன, எவ்வளவு துாரம், தொழில், வீடு, வாகனக் கடன்களின் வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன என்பதை, வங்கித் தலைமைகளை விட்டே பேச வைக்கலாம்.வருமான வரித் துறையினரின் அத்துமீறல் இருக்காது; அனைத்துமே முகமற்ற செயற்பாடாக, இணையம் வழியான நடவடிக்கையாக இருக்கும் என்றார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸ்களும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தேவைப்பட்டால் மீண்டும் அவை வலையேற்றப்படும் என்றார்.இதில் என்ன நடந்திருக்கிறது என்பதையும், அமைச்சர் சொல்ல வேண்டும்.பல வங்கிகளில் இருந்து, சொத்து பத்திரங்களை மீண்டும் வாங்குவதற்கு ஆகும் காலவிரயம் அசாத்தியமானது. 15 நாட்களுக்குள் பத்திரங்கள் திருப்பித் தரப்பட வேண்டும் என்றார் அமைச்சர். அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை, அமைச்சர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.ஏஞ்சல் வரி நீக்கம், அன்னிய முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரி நீக்கம் என்றெல்லாம் அவர் தெரிவித்துள்ள அறிவிப்புகள், நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன என்பதை, அடுத்தடுத்து வரும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் நிதி அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.
இத்தகைய ஓர் ஒழுங்கை, நிதி அமைச்சர் பின்பற்றுவாரானால், இரண்டு விஷயங்கள் நடைபெறும்.இந்த அரசு, உண்மையாகவே பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்க முனைப்பு காட்டுகிறது என்ற தோற்றமும், நம்பிக்கையும், மக்களுக்கு ஏற்படும்.இரண்டு, ஊடகங்களைச் சந்திப்பதன் மூலம், எண்ணற்ற வேறு பிரச்னைகளும் நிதி அமைச்சருக்குப் போய் சேரும். உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள, இத்தகைய உரையாடல், நிதி அமைச்சகத்துக்குப் பயனுள்ளதாக அமையும்.பலன்கள் பரிசீலனைதற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், அடுத்த இரண்டு காலாண்டுகளில் பலன் தரத் துவங்க வேண்டும்.
ஆனால், இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் ஆழமாக இருக்குமானால், அது ஆறுவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசமும் அதிகமாகவே இருக்கும்.அதைத் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டும். தேவைப்பட்டால், மேன்மேலும் புதிய மருந்துகளை வழங்க வேண்டும். இன்னமும் நிதி அமைச்சரிடம் பல்வேறு துருப்புச் சீட்டுகள் இருக்கின்றன.உதாரணமாக, ஜி.எஸ்.டி.,யை, 15 அல்லது ,18 சதவீதத்தில், ஒற்றை வரியாகக் குறைக்கலாம். பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரலாம். ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் போதே, அதில் பாதியளவேனும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு வலியுறுத்தலாம்.
இரண்டாம், மூன்றாம் வீட்டின் கடனுக்கும் வருமான வரிச் சலுகை வழங்கலாம். மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தலாம்.பொருளாதாரம் என்பது கைக்குழந்தை மாதிரி; அதைப் பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும். தேவைப்படும்போது போதிய ஊட்டச்சத்து உணவுகளைக் கொடுத்து, மருந்துகள் கொடுத்து, அன்பும் ஆதரவும் காட்டி, கண் முன்னேயே வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.அதுவும் குழந்தைக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், நம் கவனம், இரண்டு மடங்கு தேவைப்படும்.
இப்போது, நம் பொருளாதாரத்துக்குத் தேவைப்படுவது, இப்படிப்பட்ட தாய்மையுடனான கவனிப்பு தான். நிதி அமைச்சர் அதைத் துவங்கியிருக்கிறார். குணமாகி, குழந்தை ஓடி விளையாடும் வரை, அதைத் தொடர வேண்டும் என்பதே, நம் விருப்பம்.---------ஆர்.வெங்கடேஷ்pattamvenkatesh@gmail.comஎதிர்பார்த்தபடியே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிவிட்டார். பொருளாதார மந்தநிலை பற்றி வந்த அனைத்து விமர்சனங்களுக்கும், பதில் அளிக்கும் விதமாக இருந்தது அவரது பேச்சு. இது போதுமா... இன்னும் செய்யப்பட வேண்டுமா?
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|