பதிவு செய்த நாள்
17 நவ2019
03:17
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிந்துள்ளது. கடந்த அக்டோபரில், நாட்டின் ஏற்றுமதி, 1.11 சதவீதம் சரிவை கண்டு, 1.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்த சரிவுக்கு, பெட்ரோலியம், கம்பளம், தோல் பொருட்கள், அரிசி, தேயிலை ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்ததே முக்கிய காரணம்.ஏற்றுமதி மட்டுமின்றி, இறக்குமதியும் மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு, 16.31 சதவீதம் சரிவை கண்டுள்ளது. அக்டோபரில், 2.69 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி நடைபெற்றுள்ளது.இதையடுத்து, ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசமான, வர்த்தக பற்றாக்குறை, 79 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.கடந்த ஆண்டில், அக்டோபர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை, 1.30 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2016ம் ஆண்டு, ஜூலையில் இறக்குமதியானது, 19 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டது.
அதன் பின், மூன்றாண்டுகள் கழித்து, நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் தான் அதிக சரிவு ஏற்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், தங்கம் இறக்குமதி, 5 சதவீதம் குறைந்து, 13 ஆயிரத்து, 248 கோடி ரூபாயாக உள்ளது.நடப்பாண்டு அக்டோபரில், மொத்தம், 30 முக்கிய துறைகளில், 18 துறைகளில் ஏற்றுமதி வளர்ச்சி சரிவை கண்டுள்ளது.நடப்பு ஆண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மொத்த ஏற்றுமதி, 2.21 சதவீதம் குறைந்து, 13.39 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதே காலகட்டத்தில் இறக்குமதி, 8.37 சதவீதம் குறைந்து, 20.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதையடுத்து, ஏப்ரல் முதல்- அக்டோபர் வரையிலான காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 6.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதுவே, கடந்த நிதியாண்டில், 8.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இதற்கிடையே ரிசர்வ் வங்கி, நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, அக்டோபர் மாதத்தில், 1.24 லட்சம் கோடி ரூபாயாகவும், சேவைகள் இறக்குமதி, 78 ஆயிரத்து, 624 கோடி ரூபாயாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.***அக்டோபரில் ஏற்றுமதி நிலவரம்துறை சரிவு (சதவீதத்தில்)பெட்ரோலியப் பொருட்கள் 14.6கம்பளம் 17தோல் பொருட்கள் 7.6அரிசி 29.5தேயிலை 6.16
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|