பதிவு செய்த நாள்
16 டிச2019
00:09
உலக பங்கு வர்த்தகம், அடுத்த சில வாரங்களில், அமெரிக்க – சீன வர்த்தக ஒப்பந்தம் தழுவியும், வரும் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்ப்புகள் சார்ந்தும், உலக முதலீட்டாளர்களின் அடுத்த ஆண்டின் (காலண்டர் ஆண்டு – 2020) முதலீட்டு திட்டங்களை மையப்படுத்தியும் அமையும்.
மேலும், பிரிட்டன் நாட்டின் பொதுத் தேர்தல் முடிவு, அந்த நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற செய்த முடிவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இந்த நிகழ்வுகளால் உலக வர்த்தகம், பெரும் மாற்றங்களை சந்திக்க கூடும். மாற்றங்களின் விளைவுகள், சில நாடுகளுக்கு சாதகமாகவும், சில நாடுகளுக்கு பாதகமாகவும் அமையக்கூடும்.
ஆனால், எத்தகைய முடிவுக்கு இந்த பிரச்னைகள் வரும் என்ற சந்தேகங்களும், கவலைகளும், உலக வர்த்தகத்தை பெரும் பாதிப்புக்கு உட்படுத்தியது என்பது மட்டும் உண்மை.பல நாடுகளின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, பணவீக்கம் ஆகியவை இதனால் பாதிக்கப்பட்டன. உலக அளவில் உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
உற்பத்தி செய்யும் நாடுகளில், விலைகள் மிக குறைவாகவும், நுகர்வு செய்யும் சில நாடுகளில், அதிகமாகவும் இவை அமைவதற்கு, வர்த்தக போர் மிக முக்கிய காரணம்.விலை பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம், பெரிய நாடுகள் விதித்த தற்காலிக தடைகளும், வரிகளுமே ஆகும்.
வர்த்தக தடைகள், அமெரிக்கர்களின் சீன உற்பத்தி பொருட்களின் நுகர்வை குறைத்தது என்று சொல்லலாம். அதன் எதிர் விளைவு, சீனாவிற்கு அத்தியாவசிய தேவையான, அமெரிக்க பன்றி இறைச்சி, இறக்குமதி போதாமையால், விலை இரட்டிப்பை கண்டது.
சீனா மீது அமெரிக்கா விதித்த கடும் இறக்குமதி தடைகள், அந்த நாட்டின் ஏற்றுமதியை மட்டும் பாதிக்கவில்லை; சீனாவுடன் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகின.அமெரிக்காவும் இந்த தடைகளால் பாதிப்பு அடைந்தது. குறிப்பாக, அமெரிக்காவின் விவசாய உற்பத்தி ஏற்றுமதி மிகவும் பாதிக்கப் பட்டது.
மாறாக, சீனர்களின் முக்கிய உணவான பன்றி இறைச்சியின் விலை, இரட்டிப்பாகக் கூடியது. ஏற்றுமதியை மட்டுமே நம்பிய பல சந்தை பொருட்கள், தமக்கு உரிய விலையை இழந்தன. இறக்குமதியை மட்டுமே நம்பி நுகர்வு செய்யப்பட்ட பொருட்கள் பல, அந்தந்த நாடுகளின் சந்தைகளில் கிடு கிடுவென உயர்ந்தன.
அமெரிக்காவும், சீனாவும் மாறி மாறி, இறக்குமதி தடைகளை ஒருவருக்கு ஒருவர் போட்டாலும், அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டன என்பதே உண்மை.இந்த பாதிப்பு ஒருபுறம் இருக்க, மறுபக்கம், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது. இருந்தும், இந்திய ஏற்றுமதி, பல வகைகளில் பாதிப்புக்கு உள்ளான காலகட்டமாக, சமீப ஆண்டுகள் அமைந்தன.
இதற்கான புரிதல்கள் நம் நாட்டிலேயே குறைவாக இருந்தது என்பது நம் முக்கிய சிக்கல். ஆனாலும், வரும் காலங்களில், இந்திய ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்க தேவையான சூழல் அமைந்து வருகிறது. இந்த ஆண்டு, நம் ஏற்றுமதிக்கு அவசியமான பல மூலப்பொருட்களின் விலைகள் குறைவாக உள்ளன.
மேலும், சீனாவுடன் ஒப்பந்தம் செய்தபின்னும், அமெரிக்க முதலீடுகள் அங்கிருந்து வெளியேறி, வேறு நாடுகளுக்கு செல்வது உறுதி. அந்த நகர்வு முடிவு, அந்தந்த பொருட்களின் உற்பத்தி தேவைகள், அவற்றை விற்க வேண்டிய சந்தையின் இடம் ஆகியவற்றை சார்ந்தே அமையும்.இந்தியா, இந்த வகையில் ஒரு மிகப் பெரிய சந்தையாக இருப்பதால், நம் நாட்டிற்கு பல ஆலைகள் வர வாய்ப்பு உண்டு.
ஆக, ஏற்றுமதி கூடும் காலமாகவும், உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதிக்கு மாற்றாக வளரும் காலமாகவும், 2020 நிச்சயம் அமையும்.இதை கடந்த சில வாரத்தின் உலக அரசியல், வர்த்தக செய்திகள் நமக்கு சொல்கின்றன. மேலும், உறுதியான மாற்றங்களை நோக்கி நாம் நகரும் காலகட்டம் இது. இந்திய பங்கு சந்தைகள் அதை உணர்ந்தே நடக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|