பதிவு செய்த நாள்
06 அக்2020
21:43
புதுடில்லி:கடந்த செப்டம்பரில், சேவைகள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சரிவைக் கண்டிருந்தாலும், அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது, வளர்ச்சி ஓரளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய சரிவுக்கு, கொரோனா தாக்கத்தால் தேவைகள் குறைந்துவிட்டது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, வேலை இழப்புகளும் செப்டம்பரில் அதிகரித்துள்ளது.
‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில், சேவைகள் துறையின் உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், ‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் இந்தியா எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு,49.8 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 41.8 புள்ளிகளாக இருந்தது.இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.
கடந்த ஏழு மாதங்களாகவே இக்குறியீடு சரிவில் இருந்து வந்தாலும், ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் ஓரளவு வளர்ச்சி காணப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக பிறப்பிக்கப் பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, செப்டம்பரில் வளர்ச்சி துவங்கி இருக்கிறது.இருப்பினும், வேலைகளைப் பொறுத்தவரை, சேவைகள் துறையில், கடந்த ஏழு மாதங்களாகவே சரிவு காணப்பட்டு வருகிறது.
ஒருபக்கம் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், சில நிறுவனங்களில் வேலைக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. விலைகளைப் பொறுத்தவரை, கடந்த செப்டம்பர் மாதத்தில் உள்ளீட்டு விலைகள் உயர்ந்து இருக்கின்றன. எரிபொருள், இறைச்சி மற்றும் காய்கறி செலவுகள் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், ஏழு மாத உயர்வில் இருந்தது.
இதற்கிடையே, செப்டம்பர் மாதத்துக்கான சேவைகள் மற்றும் தயாரிப்பு துறையின் ஒருங்கிணைந்த பி.எம்.ஐ., குறியீடு, ஆகஸ்டில், 46.0 என்றிருந்த நிலையில், செப்டம்பரில்,54.6 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.இது நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கொரோனாவுக்கான தடுப்பூசி வந்துவிடும் என்ற எண்ணத்தில், வரும் மாதங் களுக்கான வணிகம் குறித்த நம்பிக்கையுடன் நிறுவனங்கள் இருக்கின்றன.தயாரிப்பு துறையின் செயல்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில், தனியார் நிறுவன உற்பத்தி செப்டம்பரில் முதன் முறையாக அதிகரித்துள்ளது.
பாலியானா டி லிமா,
பொருளாதார இணை இயக்குனர்
ஐ.எச்.எஸ்., – மார்க்கிட்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|