பதிவு செய்த நாள்
13 ஜூலை2013
00:13
புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் நிதி ஆண்டில் 4,400 கோடி டாலர் (2.51 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரூபாய் மதிப்பு:இது குறித்து, மத்திய ஜவுளி துறையின் அமைச்சர் ஜே.சாம்பசிவ ராவ் கூறியதாவது:ஊக்குவிப்பு திட்டங்கள் வேண்டி கோரிக்கைநாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்து வருவதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,) நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு சரிவடைந்து வருகிறது.இதுவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு அளிப்பதாக உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பிரதமர் தலைமையிலான உயர்மட்டக்குழு, நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை, 30 சதவீதம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அமல்படுத்தும் வகையில் நெறிமுறைகளை மாற்றி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தொழிலாளர் சட்ட நெறிமுறைகளை எளிமைப்படுத்துதல், குறைந்த விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தல், பன்னாட்டு சந்தையில் போட்டிகளை எதிர் கொள்ளும் வகையில் சந்தைப் படுத்துதலுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-13 நிதியாண்டில், 3,400 கோடி டாலர் (1.94 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு ஜவுளி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது.இதனை நடப்பு நிதியாண்டில் 30 சதவீதம் உயர்த்தி 4,400 கோடி டாலர் மதிப்பிற்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் துறைக்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையில், மேற்கண்ட ஏற்றுமதி இலக்கை சுலபமாக எட்டிவிடலாம். ஜவுளித் துறையின் செயலர் ஜோத்ரா சாட்டர்ஜி தலைமையிலான அமைச்சரவை குழு, ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையை அடுத்த நான்கு வாரங்களுக்குள் அளிக்கும்.
முக்கிய சந்தைகள்:நாட்டின் ஜவுளி ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், ஐரோப்பாவில் பல நாடுகள் இன்னும் சுணக்க நிலையில் இருந்து மீளவில்லை.இதனை கருத்தில் கொண்டு பல ஜவுளி ஏற்றுமதியாளர்கள், லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளனர். இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|