பதிவு செய்த நாள்
12 ஜன2018
00:56
புதுடில்லி:‘நாட்டின் சில்லரை பணவீக்கம், 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 2017 டிசம்பரில், 5.1 சதவீதமாக அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், சில்லரை பணவீக்கம் குறித்து, பொருளாதார அறிஞர்கள், 40 பேர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:கடந்த ஆண்டு ஜூலையில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பல மாநிலங்களில், அரசு ஊழியர்களின் ஊதியமும் உயர்ந்தது.இதனால், பணப்புழக்கம் பெருகி, பொருட்களுக்கான தேவை அதிகரித்தது. இதன் தாக்கத்தால், விலைவாசி உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.
2017 டிசம்பரில், காய்கறிகள் விலை ஓரளவு குறைந்திருந்தது. இருந்த போதிலும், அம்மாதத்தில், பணவீக்கம் அதிகபட்ச தாக்கத்தை கண்டிருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.ஆய்வில் பங்கேற்றோர் கருத்துப்படி, டிசம்பரில், சில்லரை பணவீக்கம், 5.1 சதவீதமாக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, 17 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும். நவம்பரில், சில்லரை பணவீக்கம், 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4.88 சதவீதமாக உயர்ந்திருந்தது.
கடந்த, 2016 ஜூலையில், சில்லரை பணவீக்கம், 6.07 சதவீதம் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது.மொத்த விலை பணவீக்கம், டிசம்பரில், 4 சதவீதமாக உயர்ந்திருக்கும் என, தெரிகிறது. இது, நவம்பரில், 3.93 சதவீதமாக இருந்தது. 2017 அக்டோபரில், 2.2 சதவீதமாக இருந்த தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, நவம்பரில், 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்க இலக்கை, 4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
எனினும், 2017 மார்ச்சில் இருந்து ஆறு மாதங்களுக்கு, நடுத்தர கால சில்லரை பணவீக்க இலக்கு, 4.3 – 4.7 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி கணித்திருந்தது.இரண்டாவது அரையாண்டிலும், இதே நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி கொண்டிருந்தது. இதன் காரணமாகவே, 2017 அக்., மற்றும் டிசம்பரில் வெளியிடப்பட்ட, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து உயரும் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியம், அலவன்ஸ் ஆகியவற்றின் தாக்கம், தொடர்ந்து பணவீக்கத்தில் எதிரொலித்து வரும். இது, நடப்பு, 2017 – -18ம் நிதியாண்டில், மார்ச் வரை நீடிக்கும். அதனால், சில்லரை பணவீக்கம் ஏறுமுகத்தில் தான் இருக்கும்.
மதன் சப்நவிஸ்
தலைமை பொருளாதார வல்லுனர், ‘கேர் ரேட்டிங்ஸ்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|