பதிவு செய்த நாள்
13 ஜூன்2011
02:05
விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டேபோகும் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த, அதன் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. ஒரு மூட்டை சிமென்ட், 150 ரூபாயிலிருந்து 270 ரூபாயாக அதிகரித்தது. சிமென்ட் விலை உயர்வை தடுக்கும் வகையில், கடந்த ஆட்சியில், 2008, ஜனவரி முதல் 1,000 சதுரடி வரை வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு, சலுகை விலையில் 50 கிலோ மூட்டை ஒன்று 200 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு அதிகபட்சமாக 400 மூட்டைகள் வரை, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, தனியார் சிமென்ட் ஆலை அதிபர்களை நேரடியாக அழைத்து விலையை குறைக்கும்படி கூறினார். இதனால், வெளிச்சந்தையில் சிமென்ட் விலை சற்று குறைந்தது. அரசு சிமென்ட் விற்பனை செய்ததற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.தமிழகத்தில் ஆலங்குளம் மற்றும் அரியலூரில், அரசுக்கு சொந்தமான சிமென்ட் ஆலைகள் உள்ளன. ஆலங்குளம் சிமென்ட் ஆலை, ஆண்டுக்கு 2.90 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்டது. இங்கு, ஈரப்பத தொழில்நுட்பம் மூலம் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்ட அரியலூர் சிமென்ட் ஆலையில், உலர்பத தொழில்நுட்பத்தில் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.இவ்வாலைகளில், உற்பத்தி செய்யப்படும் சிமென்ட் முழுமையும், அரசு துறைகளுக்கு ஒரு மூட்டை, 200 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில், தனியார் துறையைசேர்ந்த, இந்தியா சிமென்ட் நிறுவனத்திற்கு மூன்று ஆலைகளும், மெட்ராஸ் சிமென்ட் நிறுவனத்திற்கு மூன்று ஆலைகளும், டால்மியா சிமென்ட் நிறுவனத்திற்கு இரண்டு ஆலைகளும், செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்திற்கு நான்கு ஆலைகளும், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஏ.சி.சி., நிறுவனத்திற்கு தலா ஒரு ஆலையும் உள்ளது. இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சிமென்ட் மூட்டை 290 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தி ஆலைகள், ஆண்டுக்கு மூன்று கோடியே 27 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. கடந்த மார்ச் வரை இரண்டு கோடியே 60 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 80 லட்சம் டன் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய்க்கு மேலாக சிமென்ட் விற்பனை நடக்கிறது. எதிர் காலங்களில் தமிழகத்தில், பல நிறுவனங்கள் கட்டுமானத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில், நாளுக்கு நாள் கட்டுமானத் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, மதுபானம், மணல் போன்றவற்றை விற்பனை செய்வது போல், சிமென்ட் விற்பனையிலும் தமிழக அர” ஈடுபட??வண்டும் என்ற பொதுவான கருத்து எழுந்துள்ளது. இதன் மூலம், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுவதை தடுக்க முடியும். அரசுக்கும் வருவாயும் கிடைக்கும். இதுகுறித்து இந்திய கட்டுமானத் துறையினர் சங்கத் தலைவர் (தென்னக மையம்) ரகுநாதன் கூறும்போது, 'தனியார் மதுபான ஆலைகளிலிருந்து, மதுபானத்தை வாங்கி அரசு விற்பது போல், தனியார் சிமென்ட் நிறுவனங்களிடமிருந்து, சிமென்ட் கொள்முதல் செய்து, அரசே விற்பனை செய்ய வேண்டும்.இதன் மூலம் அடிக்கடி உயரும் சிமென்ட் விலையை கட்டுப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கும். நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்கு அதிக வருவாயும் கிடைக்கும்' என்றார்.- வீ.அரிகரசுதன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|