பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
01:13
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மிகவும் சுணக்கமாக இருந்தது. இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டிலிருந்து, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீட்டில், இரட்டை வரி விதிப்பு குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியானது. தற்போது, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீட்டில், 70 சதவீதம் மொரீஷியஸ் நாடு வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.அந்த நாட்டிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள், மத்திய அரசு அளிக்கும் சலுகையை பயன்படுத்தி, இந்தியாவில் முதலீடு செய்து அதிக லாபத்துடன் சென்று விடுகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் பங்கு வர்த்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் உள்ள குளறுபடிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் சரிப்படுத்த வேண்டும் என, இந்த வாரியத்தின் முன்னாள் தலைவர் பீ.எம்.சிங் தெரிவித்தார். திங்கள்கிழமையன்று, பங்கு வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே, பல துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. குறிப்பாக, ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. இது தவிர, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் போன்ற நிறுவன பங்குகளுக்கும் தேவை குறைந்திருந்தது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள் இடம் பெற்றுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் ஆகிய இரு நிறுவனங்களுக்கு பதிலாக, வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல், கோல் இந்தியா மற்றும் சன்பார்மாசூட்டிக்கல்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலில் கூறப்பட்ட இரண்டு ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 363.90 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 17,506.63 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 17,925.17 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,314.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 27 நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்து, 3 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 108.50 புள்ளிகள் சரிவடைந்து, 5,257.90 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|