பதிவு செய்த நாள்
08 ஜூலை2011
01:48
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் (2011-12), சென்ற ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில், நேரடி வரிகள் வாயிலான மொத்த வசூல் 23.91 சதவீதம் அதிகரித்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 136 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், மறைமுக வரிகளின் நிகர வசூல் 32 சதவீதம் உயர்ந்து 76 ஆயிரத்து 499 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நேரடி வரிகள் என்பது, நிறுவனங்கள், அவற்றின் லாபத்தின் அடிப்படையில் செலுத்தும் வரி மற்றும் தனி நபர் செலுத்தும் வருமான வரி ஆகியவற்றை உள்ளடக்கியது. சுங்க வரி, உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவை மறைமுக வரிகள் பிரிவில் அடங்கியுள்ளன. மத்திய அரசின் வரிகள் வருவாய் குறித்த, புள்ளி விவர அறிக்கையில், கடந்த 2010 -11 ஆம் நிதியாண்டின், முதல் காலாண்டை விட, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் காலாண்டில், மறைமுக வரிகள் வாயிலான நிகர வசூல் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், இதே மாதங்களில் நேரடி வரிகளின் நிகர வசூல் 16.61 சதவீதம் குறைந்து 57ஆயிரத்து 268 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப அளித்தது, 200 சதவீதம் அதிகரித்துள்ளதால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மறைமுக வரி வாயிலாக 3 லட்சத்து 92ஆயிரத்து 908 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டை விட 15 சதவீதம் அதிகம். இதே போன்று, நேரடி வரி வசூல் இலக்கு 19 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 5 லட்சத்து 32ஆயிரத்து 651 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என்ற கணிப்பினால், நேரடி,மறைமுக வரிகள் வசூல் குறையும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.அதற்கு மாறாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே வரி வசூல் அதிகரித்துள்ளதால், பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று, மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசு, சென்ற மாதம் கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத சுங்க வரியை நீக்கியது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது. பெட்ரோலியப் பொருள்களுக்கான வரியை குறைத்துள்ளதால், மத்திய அரசுக்கு 24ஆயிரம் கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், நடப்பு நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட வரி வசூல் இலக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பு நிதியாண்டில், கூடுதலாக வரி செலுத்தியோருக்கு திரும்ப அளிக்கப்படும் தொகையில், குறிப்பிடத்தக்க அளவிற்கான தொகை வழங்கப்பட்டு விட்டதால், வரி வசூல், நிர்ணயித்த இலக்கை விட தாண்டும் என்றும் தெரிகிறது. மத்திய வருவாய் துறை, கூடுதலாக வரி செலுத்தியோருக்கு சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், 46ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப வழங்கியுள்ளது. இது, கடந்த ஆண்டு 15ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. சென்ற ஏப்ரல் மாதம், கூடுதலாக வரி செலுத்தியோருக்கு 28ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 12ஆயிரம் கோடி ரூபாயும், ஜூன் மாதம் 6,000 கோடி ரூபாயும், கூடுதலாக வரி செலுத்தியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், நேரடி வரி வசூல் 18 சதவீதமும், மறைமுக வரி வசூல் 40 சதவீதமும் அதிகரித்திருந்தது. நேரடி வரி வசூல், மறுமதிப்பீட்டு இலக்கு அளவான 4 லட்சத்து 46ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. ஆனால், மறைமுக வரி வசூல், மறுமதிப்பீட்டு இலக்கு அளவை விஞ்சி 3 லட்சத்து 34ஆயிரத்து 500 கோடி ரூபாயில் இருந்து, 3 லட்சத்து 42ஆயிரத்து 824 கோடி ரூபாயாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் வாயிலாக, 9 லட்சத்து 25 ஆயிரத்து 559 கோடி ரூபாய் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|