பதிவு செய்த நாள்
08 ஜூலை2011
11:00
குன்னூர் : நீலகிரி ஸ்டிராபெரி பழம், ஐஸ்பெர்க் லெட்யூஸ் காய் வகைக்கு, வெளிநாட்டு சந்தையில் மவுசு காரணமாக, அவற்றின் சாகுபடியை அதிகரிக்க, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில், ஸ்டிராபெரி, ஐஸ்பெர்க் லெட்யூஸ் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. உள்ளூர் சந்தைக்கே அவை, போதுமானதாக இல்லாததால், ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தினர், நீலகிரியில் ஸ்டிராபெரி, ஐஸ்பெர்க் லெட்யூஸ் சாகுபடியை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளனர். நீலகிரி தோட்ட தொழிற்நுட்ப நிறுவன, 'நிட்கோ' இயக்குனரும், முதன்மை செயல் அலுவலருமான சிவன் கூறியதாவது: சவுதி அரேபியாவில் உள்ள, 'கல்ப் புரொடியூசஸ்' நிறுவனம், ஆண்டுக்கு 1,200 டன் ஸ்டிராபெரி, 3,500 டன் ஐஸ்பெர்க் லெட்யூஸ் உட்பட, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பழம், காய்கறிகளை இறக்குமதி செய்து கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு முதன் முறையாக கிடைத்துள்ள இந்த ஏற்றுமதி வாய்ப்பின் முதற்கட்டமாக, 'நிட்கோ' நிறுவனம், 900 விவசாயிகளை ஒருங்கிணைத்து, 25 ஏக்கரில் ஸ்டிராபெரி பழங்கள், 200 ஏக்கரில் ஐஸ்பெர்க் லெட்யூஸ் காய்கறியை உற்பத்தி செய்ய, முடிவு செய்துள்ளது. நிட்கோவில் உறுப்பினர்களாக இணையும் விவசாயிகளுக்கு, தேவையான நாற்று, விதைகளை வழங்குவதுடன், அவர்களுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து கொடுப்பதுடன், 'ஊட்டி பிரஷ்' என்ற பெயரில் அவற்றை சந்தைப்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான காய்கறிகளையும், எவ்வித சேதமுமின்றி சந்தைப்படுத்த, குளிர்சாதன வசதியுடன் கூடிய தோட்ட கூட்டமைப்பு பூங்கா, மத்திய, மாநில அரசின் மானிய உதவியுடன், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில், ஊட்டி முத்தோரை பகுதியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மூலிகை தேயிலை தூளுக்கு, வெளிநாடுகளில் கிராக்கி அதிகம் என்பதால், குன்னூர் அருகேயுள்ள தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம், ஆர்கானிக் தேயிலை உற்பத்தி மேற்கொள்ள முன்வந்துள்ளது; இதை சந்தைப்படுத்தும் பொறுப்பை, 'நிட்கோ' ஏற்றுள்ளது. இவ்வாறு சிவன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|