பதிவு செய்த நாள்
25 ஜூலை2011
09:08
ராமநாதபுரம் : ''தமிழகத்தில் ஐந்து லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், திட்டப்பணிகளைச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி கூறினார். ராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்க கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில், வரும் 30ம் தேதி கருத்தரங்கு நடக்கிறது. முதல்வர் ஜெ., 'அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்று, நிவர்த்தி செய்யப்படும்' என, தேர்தலின்போது கூறினார். அதன்படி, முதல்வர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து நியாயமான தீர்வு காண்பார், என்ற நம்பிக்கையில் உள்ளோம். அரசுத் துறைகளில் இரண்டு லட்சம்; சத்துணவு, அங்கன்வாடி அமைப்பாளர், மக்கள் நலப் பணியாளர் போன்ற மற்ற பிரிவுகளில் மூன்று லட்சம் என ஐந்து லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமைச் செயலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளதால், கீழ்மட்ட ஆட்களின்றி அதிகாரிகள் செயல்பட முடியவில்லை. காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பினால்தான், அரசின் திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக இருக்கும். வாரிசுதாரர்கள் பணியிடம் நிரப்புவதிலும் சுணக்கம் காணப்படுகிறது. மருத்துவத் துறையில் 1993லிருந்தும், வேளாண் துறையில் 1996லிருந்தும், கல்வித் துறையில் 2004லிருந்தும் வாரிசுதாரர்கள் பணிக்காகக் காத்திருக்கின்றனர். பல துறைகளில் பணிவரன்முறை செய்யப்படாமல், ஆரம்ப கட்ட ஊதியத்திலேயே ஊழியர்கள் பணியாற்றி, சிலர் இறந்தும், பலர் ஓய்வும் பெற்று விட்டனர். அரசு ஊழியர்களுக்கான பயிற்சி நிலையம் மண்டலம்வாரியாக அமைக்க வேண்டும். ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம், என்றார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உடனிருந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|