பதிவு செய்த நாள்
26 ஆக2011
09:23
காரைக்குடி : கோ- ஆப்டெக்ஸ் கெடுபிடியால் காரைக்குடியில் செட்டிநாடு கைத்தறி சேலை உற்பத்திக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கருணாநிதி நகர், வைத்தியநாதபுரம், காளவாய் பொட்டல், கோவிலூர் மற்றும் திருப்புத்தூர் பகுதியில் 5 ஆயிரம் குடும்பத்தினர் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நூல் தரம், எளிதில் சாயம் போகாமல் இருப்பதால், இங்கு தயாராகும் செட்டிநாடு சேலைகளுக்கு பல மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. காரைக்குடிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும், வெளிநாடுகளிலும் இந்த சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நெசவாளர் சங்கம் மூலமாக 'கோ- ஆப்டெக்ஸ்' நிறுவனம் கைத்தறி சேலைகளை கொள்முதல் செய்து, விற்பனை செய்யும். தற்போது, நெசவாளர் சங்கங்களுக்கு கோ- ஆப்டெக்ஸ் நிறுவன அதிகாரிகள் விதித்துள்ள பல கெடுபிடிகளால், செட்டிநாடு சேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க செயலாளர் பழனியப்பன் கூறுகையில், '' ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னதாக 'கோ- ஆப்டெக்ஸ்' நிறுவனம் மூலம், காரைக்குடியில் செட்டிநாடு சேலைகள் கொள்முதல் செய்வது வழக்கம். தற்போது, 'கோ- ஆப்டெக்ஸ்' நிறுவனம், 60 டிசைன்களில் தயாராகும் செட்டிநாடு சேலைகளில் 10க்கும் குறைவான 'டிசைன்' களில் மட்டுமே அதிகமான சேலைகளை உற்பத்தி செய்யும்படி, கெடுபிடி விதித்துள்ளது. இதனால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட டிசைன் சேலைகள் உற்பத்தி செய்வதற்கு நெசவாளர் சங்கங்களில் போதிய நிதி வசதி இல்லை. இதனால், கோ- ஆப்டெக்ஸ் விரும்பிய டிசைன்களில் செட்டிநாடு சேலை தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|