பதிவு செய்த நாள்
05 செப்2011
03:55
புதுடில்லி : வரும் சோயா பருவத்தில், (அக்டோபர் - செப்டம்பர்), நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றமதி, 50 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சோயா உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இதற்கான தேவை உயர்வு போன்றவற்றால், இதன் ஏற்றுமதி கடந்த பருவத்தை விட, வரும் 2011-12ம் பருவத்தில், 2 லட்சம் டன் அதிகரித்து, 50 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பருவத்தில்,சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 48 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என, இந்திய சோயா பதப்படுத்துவோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார். சர்வதேச அளவில், இந்திய சோயா புண்ணாக்கிற்கு அதிக வரவேற்பு உள்ளது. மற்ற நாடுகளின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், இதன் விலையும் உள்ளது. இந்நிலையில், வரும் பருவத்தில், சோயா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி இலக்கை, சுலபமாக எட்ட முடியும் என, அகர்வால் நம்பிக்கை தெரிவித்தார். சோயா உற்பத்தி, 11 சதவீதம் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில், சாதகமான பருவ நிலை நிலவுகிறது. இதனால், இதன் உற்பத்தி எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். சோயாவிலிருந்து, உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், சமையலுக்கும், மாற்று எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும், புண்ணாக்கு, கோழி மற்றும் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மொத்த சோயா புண்ணாக்கு உற்பத்தியில், 70 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டிற்கு, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை போட்டி ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. நம் நாட்டிலிருந்து, ஜப்பான், வியட்நாம், தென்கொரியா,சீனா போன்ற நாடுகளுக்கு, சோயா புண்ணாக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|