பதிவு செய்த நாள்
27 செப்2011
09:58
மதுரை: தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், அதற்குரிய உணவுப் பொருட்களை சில வியாபாரிகள் பதுக்கியுள்ளதால், மதுரையில் விலை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, பலகாரங்களுக்கு இப்போதே, "ஆர்டர்' குவிகின்றன. தீபாவளி அன்று உடலுக்கு நல்லெண்ணெயும், உணவுக்கு சூரியகாந்தி எண்ணெயும் கட்டாயம். தற்போது இதன் வரத்து சீராக இருந்தாலும், பதுக்கலால் கடந்த வாரம் 120 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் நல்லெண்ணெய் நேற்று 124 ரூபாய்க்கும், லிட்டருக்கு 131 ரூபாய் இருந்த தும்பை நல்லெண்ணெய் 135 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. லிட்டருக்கு 77 ரூபாய் இருந்த சூரியகாந்தி எண்ணெய், 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. "பண்டிகை நெருங்கும் சமயத்தில் மேலும் விலை அதிகரிக்கும்' என்கிறார், எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி. அடுத்ததாக, பருப்பு வடைக்கும், அசைவ பிரியர்களின் ஈரல் கூட்டுக்கும் பயன்படுவது கடலை பருப்பு. இந்தாண்டு வரத்து சீராக இருந்தாலும், விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், கிலோ, 38 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் 54 ரூபாயாக அதிகரித்து, நேற்று 56 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது குறித்து பருப்பு வியாபாரிகள் சங்கச் செயலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், "கடலை பருப்புக்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றாலும், விலை உயர்வுக்கு ஏற்றுமதி மற்றும் ஆன்-லைன் வர்த்தகம் காரணம்,'' என்றார். இதேபோல், சர்க்கரை 27 ரூபாயிலிருந்து 31 ரூபாய், பூண்டு 35 ரூபாயிலிருந்து 80 ரூபாய், புளி 70 ரூபாயிலிருந்து 150 ரூபாய், மிளகு 250 ரூபாயிலிருந்து 400 ரூபாய், பொரிகடலை 45 ரூபாயிலிருந்து 68 ரூபாய் என விலை அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|