பதிவு செய்த நாள்
02 அக்2011
02:05
நாட்டின் பங்கு வர்த்தகம் நடப்பு வாரத்தில், அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. முந்தைய வார மதிப்பீட்டின்படி, நடப்பு வாரத்தில், பங்கு வர்த்தகம் நன்கு இருக்கும் என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு, முக்கிய காரணம் அமெரிக்காவின் பொருளாதார சுணக்க நிலையை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு, பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தது. மேலும், ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளின் கடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, ஐரோப்பிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால், உலகளவில் பங்கு வர்த்தகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கும் என்பார் நடக்காது.... என்ற சொல் வழக்கு போன்று நடப்பு வாரத்தில், ஒட்டு மொத்த அளவில், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும், பங்கு வியாபாரம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. உள்நாட்டை பொறுத்தவரை, பாதகமான அம்சம் என்றால், அது, உணவுப் பொருள் பணவீக்கம் செப்டம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.13 சதவீதமாக அதிகரித்ததும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.5 சதவீதமாக சரிவடைந்ததும்தான். மற்றபடி, வர்த்தகத்தை பாதிக்கும் அளவிற்கு அதிக இடர்பாடு அளிக்கும் செய்திகள் எதுவும் வரவில்லை. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் ஒருநாள் உயர்வதும், மறுநாள்குறைவதும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு வாரத்தில், திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஐந்து வர்த்தக தினங்களில், செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்கள் தவிர, ஏனைய மூன்று தினங்களில் வர்த்தகம், சுணக்கமாக இருந்தது. ஆனால், ஒட்டுமொத்த அளவில் மேற்கண்ட ஐந்து வர்த்தக தினங்களில், சென் செக்ஸ் 403 புள்ளிகள் அதிகரித்து, 16,454 புள்ளிகளில் நிலை பெற்றிருந்தது. தேசியப் பங்குச் சந்தையிலும், வர்த்தகம் இதே போன்றுதான் இருந்தது.இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' இதே காலத்தில்,108 புள்ளிகள் உயர்ந்து, 4,943 புள்ளிகளில் நிலை கொண்டது.துறைகள்: நடப்பு வாரத்தில் நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் தொடக்கத்தில், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், பொறியியல், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, இந்திய ரூபாய்க்கு எதிரான, அமெரிக்க டாலரின் வெளி மதிப்பு உயர்வால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. ஆனால், வார இறுதியில், மேற்கண்ட துறைகள் தவிர, பொறியியல், வங்கி, ரியல் எஸ்டேட், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது. நிதிப் பற்றாக்குறை: நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரியில் சரிவு நிலை, ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததால், வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு மற்றும் அரசின் செலவினம் போன்றவற்றால், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்துமாதங்களில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, மத்திய பட்ஜெட் மதிப்பீட்டை விட, அதிகரித்துள்ளது. ஆனால், நடப்பு முழு நிதியாண்டிற்கான, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை இலக்கு அளவான 4.6 சதவீதம் என்ற அளவில் தான் இருக்குமென நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், செலவுகளை எதிர்கொள்ள கூடுதலாக 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வெளிநாட்டு கடன், கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 3.4 சதவீதம் அதிகரித்து, 31 ஆயிரத்து 700 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து திரட்டிய வர்த்தக கடன் அதிகரிப்புதான் காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்கம்,வெள்ளி: நடப்பு வாரத்தில், மதிப்பு மிகு உலோகங்களான தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு மிகவும் சரிவடைந்துள்ளதால், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. இது, தங்கம் இறக்குமதிக்கு தடையாக உள்ளது. உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்காமற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால், சர்வதேச சந்தைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து போயுள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் பண்டிகை மற்றும் திருமண காலங்கள் வருவதையொட்டி இவற்றின் விலை உயரக்கூடும் என்ற மதிப்பீடும் உள்ளது. இவற்றின் விலை உயருமா அல்லது குறையுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புதிய வெளியீடுகள்: பங்கு வர்த்தகம், சாதகம் இல்லாத சூழ்நிலையிலும், பல நிறுவனங்கள் துணிந்து பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கி வருகின்றன. பல நிறுவனங்கள், பங்கின் வெளியீட்டு விலையை மிகவும் அதிகமாக நிர்ணயிப்பதால், அவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது மிகவும் குறைந்து போகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, மூலதனச் சந்தையில் பங்குகளை வெளியிட்ட நிறுவனங்களின் பங்குகள், சென்ற மாதம் பட்டியலிடப்பட்ட போது வெகுவாக குறைந்து போனது. குறிப்பாக, எஸ்.ஆர்.எஸ் நிறுவனம் பங்கு ஒன்றை 58 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. ஆனால் அதன் விலை, பங்குச் சந்தையில் தற்போது, 42 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்து 33 ரூபாய்க்கு கைமாறி வருகிறது. இதே போன்று, புரூக்ஸ் லேப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 100 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. அது தற்போது, 77 சதவீதம் சரிவடைந்து, 23 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், பி.ஜி. எலக்ட்ரோபிளாஸ்ட் நிறுவனம் பங்கு ஒன்றை 210 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. இதன் பங்கின் விலை தற்போது, பங்குச் சந்தையில், 49 சதவீதம் அதிகரித்து 312 ரூபாய்க்கு கைமாறி வருகிறது. டி.டி. பவர் சிஸ்டம்ஸ் நிறுவனப் பங்கின் விலை, வெளியீட்டு விலையான 256 ரூபாயை ஒட்டியே உள்ளது. சுவாஸ் ஏர் நிறுவனத்தின் பங்கு வெளியீடு செப்டம்பர் மாதம் 26ம் தேதி தொடங்கி, இம்மாதம் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிறுவனம், பங்கின் விலையை 84-90 ரூபாய் என்ற அளவில் நிர்ணயித்துள்ளது. இதுதவிர, எம் அண்டு பி சுவிட்ச் நிறுவனத்தின் (180-186 ரூபாய்) பங்கு வெளியீடு வரும் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஒன்லைப் கேப்பிட்டல் நிறுவனப் பங்கின் வெளியீடு (100-110 ரூபாய்) வரும் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. பிளக்சி டப் நிறுவனத்தின் பங்கு வெளியீடு (145-155 ரூபாய்) வரும் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது.வரும் வாரம் எப்படி இருக்கும்? உலகளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், வரும் வாரத்திலும், பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - திருமை.பா.ஸ்ரீதரன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|