பதிவு செய்த நாள்
15 அக்2011
11:03
புதுடில்லி: நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது. வெள்ளம், வேலைநிறுத்தம், தெலுங்கானா போராட்டம் போன்றவற்றால் நிலக்கரி சுரங்கப் பணிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால், நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறனான 99,503 மெகா வாட்டில் பாதியளவு உற்பத்தி திறன் கொண்ட சுமார் 29 முக்கிய அனல் மின் நிலையங்களில் 4 நாள்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளன. மேலும், 12 சதவீத திறன் கொண்ட நிறுவனங்கள் 7 தினங்களுக்கு போதுமான கையிருப்பை மட்டுமே நம்பியுள்ளன. சாதாரணமாக, தடையற்ற மின் உற்பத்திக்காக நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 நாள்களுக்கு தேவையான நிலக்கரியை கையிருப்பு வைப்பது வழக்கம். பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி. சுமார் 5,000 மெகா வாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாகவும், நீர் அளவு குறைந்து போனதால், நீர் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நிலக்கரி அமைச்சகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பற்றாக்குறையால் அதிகம் பாதிப்புக்குள்ளானவை தென் மாநிலங்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|