பதிவு செய்த நாள்
15 நவ2011
00:09
புதுடில்லி: தெலுங்கானா போராட்டம் மற்றும் நிலக்கரி சுரங்கப் பகுதிகளில், அதிக மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நிலக்கரி இறக்குமதி 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேவை: உலகளவில் நிலக்கரி உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே நிலக்கரி உற்பத்தி குறைந்து வருகிறது. அதே சமயம், உள்நாட்டில், நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ளது.தேவைக்கும், அளிப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் பொருட்டு, அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சென்ற அக்டோபருடன் முடிந்த ஏழு மாத காலத்தில், இந்தியா 1,000 கோடி டாலர் மதிப்பிலான 2.1 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 51 சதவீதம் அதிகமாகும்.சென்ற அக்டோபரில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி, கடந்த ஆண்டை விட 105 சதவீதம் அதிகரித்து, 140 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மின்நிலையங்கள்:சென்ற நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 9.30 கோடி டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், நிலக்கரி இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகத் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, 'உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி சரிவடைந்துள்ளது. போதிய அளவிற்கு நிலக்கரி இல்லாததால், அனல் மின் நிலையங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மின் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது' என்று தெரிவித்தார்.உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில், 80 சதவீதத்தை, அனல் மின் நிலையங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. மின் உற்பத்தி மட்டுமின்றி, நிலக்கரியை நம்பியுள்ள பல்வேறு தொழில்களும், அதன் பற்றாக்குறையால் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன.இந்தியாவிலுள்ள பெரும்பாலான அனல் மின் நிலையங்கள், நிலக்கரியைக் கொண்டு இயக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்களின் மொத்த உற்பத்தித் திறன், 86 ஆயிரத்து 717 மெகாவாட் என்ற அளவிற்கு உள்ளது. கையிருப்பு: இதில், 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, 89 மின் நிலையங்கள், நிலக்கரி பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள், குறைந்த அளவிற்கே நிலக்கரியை கையிருப்பில் வைத்துள்ளன.மத்திய அரசு, நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலக்கரியை தடையின்றி வினியோகிக்குமாறு, பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகம் உள்ளதால், பெரும்பாலான நிறுவனங்கள், உள்நாட்டு நிலக்கரியை சார்ந்துள்ளன. எனினும், என்.டி.பி.சி., போன்ற நிறுவனங்கள் திரவ எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதியை செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றன.கோல் இந்தியா: உருக்கு நிறுவனங்களின் உற்பத்தி, உயர் ரக கோக்கிங் கோல் எனப்படும் நிலக்கரியை சார்ந்தே உள்ளது. அதனால், இந்நிறுவனங்கள், அதிகபட்ச அளவிற்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள் அவற்றின் உயர்தர நிலக்கரி தேவையில் 90 சதவீதத்தை, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்கின்றன. சொந்தமாக, நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டிராத ஒரு சில உருக்கு நிறுவனங்கள், அதிகளவில் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகின்றன. உதாரணமாக, ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் நிறுவனம், உருக்கு உற்பத்திக்காக 35 லட்சம் டன் உயர் வகை நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிறுவனம், அதன் உருக்கு உற்பத்தி திறனை மேம்படுத்தும்பட்சத்தில், உயர் வகை நிலக்கரி இறக்குமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் இறக்குமதி செலவீனம், ஒரு டன்னுக்கு 2,500 ரூபாய் அதிகரித்துள்ளது.நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), நாட்டில் 78.7 கிலோ வாட் மின் உற்பத்தி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலக்கரி பற்றாக்குறையால் இந்த இலக்கை எட்டுவது கடினம் என மின் துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.பயன்பாடு: சென்ற செப்டம்பரில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி 17.8 சதவீதம் குறைந்துள்ளது. அனல் மின் நிலையங்கள் மற்றும் உருக்கு நிறுவனங்களின் நிலக்கரி பயன்பாடு, 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.அனல் மின் நிறுவனங்களும், உருக்கு நிறுவனங்களும் அவற்றின் உற்பத்தி திறனை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, அதன் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|