பதிவு செய்த நாள்
31 ஜன2012
01:48
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின், ஒப்புதல் பெற்ற நிலையிலும், புதிய பங்கு வெளியீட்டுத் திட்டத்தை நான்கு நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.
நடப்பு 2012ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இந்நிலையிலும், மைக்ரோமேக்ஸ் மொபைல்ஸ், பிரைட் ஓட்டல்ஸ், பீடூல் ஆயில் மற்றும் தாரா ஜுவல்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள், அவற்றின் புதிய பங்கு வெளியீட்டை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளதாக, பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மதிப்பு, 701 கோடி ரூபாயாகும்.
"செபி' அமைப்பின் ஒப்புதல்:பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் நிதி திரட்ட விரும்பும் நிறுவனங்கள், "செபி' அமைப்பின் ஒப்புதல் பெற்ற தினத்திலிருந்து, ஒரு வருட காலத்திற்குள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டும். ஆனால், 2011ல், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.
இந்நிலையில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பல நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பிறகு, வெளியீட்டு விலையை விட, பல மடங்கு குறைந்து போனது.
முதலீட்டாளர்கள்:இதனால், புதிய வெளியீடுகளில் முதலீடு செய்வதில், முதலீட்டார்களுக்கு ஆர்வம் இல்லாமல் போனது.இதையடுத்து, பல நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்வதை ஒத்திப் போட்டும், தவிர்க்கவும் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட நான்கு நிறுவனங்கள் தவிர, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அனுமதி காலம் முடிய இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அந்நிறுவனங்களும் இன்னும் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளாமல் உள்ளன.
இவ்வரிசையில், மார்க் பயோசயின்சஸ், திஜாரியா பாலிபைப்ஸ், தாரா ஹெல்த் புட்ஸ், எம்பசி பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ், தேவ் புரோகான், வி.ஆர்.எல்.லாஜிஸ்டிக்ஸ், லோக்மாத் மீடியா, ஆரவல்லி இன்ப்ராபவர்ஸ், ஜோயாலுக்காஸ் இந்தியா, சிமென்டிக் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிறுவனங்கள் அனைத்துமாக, பங்கு வெளியீட்டின் மூலம், 4,210 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்தன என, எஸ்.எம்.சி.குளோபல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமை ஆய்வு அதிகாரி ஜெகன்நாதம் துண்கண்டலா தெரிவித்தார்.
பொதுத் துறை நிறுவனங்கள்மேலும், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பொதுத் துறை நிறுவனங்களும், பங்கு வெளியீட்டை மேற்கொள்ளாமல் உள்ளன.
பங்கு வெளியீட்டை மேற்கொள்ளாத நிறுவனங்களின் வரிசையில், தாரா ஜுவல்ஸ், முதல் நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனம், ஜனவரி,3ம் தேதிக்குள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டும். 50 கோடி ரூபாய்க்கு பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டிய, இந்நிறுவனம் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, ஜனவரி, 12ம் தேதிக்குள் பங்கு வெளியீட்டின் மூலம், 125 கோடி ரூபாய் திரட்டுவதாக இருந்த, பிரைடு ஓட்டல்ஸ் நிறுவனமும் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவில்லை.
மைக்ரோமேக்ஸ் இன்பர்மேடிக்ஸ் நிறுவனம், ஜனவரி, 13ம் தேதிக்குள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, 426 கோடி ரூபாயை திரட்டுவதாக இருந்தது. இந்நிறுவனமும் அதன் பங்கு வெளியீட்டை நிறுத்தியது. பீடூல் ஆயில் நிறுவனம், ஜனவரி, 18ம் தேதிக்குள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, 100 கோடி ரூபாயை திரட்ட அனுமதி பெற்றிருந்தது. ஆனால், இந்நிறுவனமும் பங்கு வெளியீட்டை நிறுத்தியுள்ளது.
29 நிறுவனங்கள்:கடந்த 2011ல், ரிலையன்ஸ் இன்ப்ரா டெல், லோதா டெவலப்பர்ஸ், ஆம்பியன்ஸ், கிளென்மார்க்ஸ் ஜெனரிக்ஸ் மற்றும் பீ.பி.டி.பி., உள்ளிட்ட, 29 நிறுவனங்கள், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையிலிருந்து, மொத்தம், 32 ஆயிரத்து 398 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்தன. ஆனால், இந்நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|