பதிவு செய்த நாள்
03 மார்2012
00:06
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, 3,000 கோடி டாலரைத் தாண்டும் (1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு, 7,124 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டைவிட, 33 சதவீதம் (9,094 கோடி ரூபாய்) குறைவாகும்.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, பத்து மாத காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 2,418 கோடி டாலராக (1 லட்சத்து 20 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் நிதி இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 51 சதவீதம் (1,603 கோடி டாலர் - 80 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) அதிகமாகும். இதில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் தான், அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இம்மாதங்களில் முறையே, 312 கோடி டாலர், 466 கோடி டாலர், 565 கோடி டாலர் அளவிற்கு அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது.மத்திய அரசு, அன்னிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், நாட்டில் தொழில் துவங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் விளைவாக, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நிலவினாலும், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடு சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.இதே நிலை தொடரும் பட்சத்தில், சென்ற டிசம்பரில் அன்னிய நேரடி முதலீடு குறைந்திருந்தாலும், நடப்பு முழு நிதியாண்டில், 3,000 கோடி டாலரைத் தாண்டும் (1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், சேவை துறையில், 457 கோடி டாலர் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மருந்து (319 கோடி டாலர்), தொலைத் தொடர்பு (198 கோடி டாலர்), கட்டுமானம் (160 கோடி டாலர்), மின்சாரம் (144 கோடி டாலர்), உலோகம் (149 கோடி டாலர்) அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில், மொரீஷியஸ் நாட்டின் பங்களிப்பே அதிக அளவில் உள்ளது. இந்நாடு, 824 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இது தவிர, சிங்கப்பூர் (399 கோடி டாலர்), ஜப்பான் (268 கோடி டாலர்), லண்டன் (257 கோடி டாலர்), ஜெர்மனி (139 கோடி டாலர்), நெதர்லாந்து (107 கோடி டாலர்) மற்றும் சைப்ரஸ் (102 கோடி டாலர்) அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 1,943 கோடி டாலராக (97 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|