பதிவு செய்த நாள்
03 ஏப்2012
01:29
புதுடில்லி : கடந்த 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 13 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,460 கோடி டாலராக (1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 4.3 சதவீதம் அதிகமாகும். இதே மாதங்களில், நாட்டின் இறக்குமதி, 20.7 சதவீதம் அதிகரித்து, 3,980 கோடி டாலராக (1 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதியைக் காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 1,520 கோடி டாலராக (76 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான ஜனவரியில், 1,480 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு காலத்தில், எண்ணெய் இறக்குமதி, 39.45 சதவீதம் அதிகரித்து, 1,266 கோடி டாலராக (63 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. எண்ணெய் சாராத, இதர பொருட்களின் இறக்குமதி, 13.5 சதவீதம் உயர்ந்து, 2,712 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின், 11 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 26 ஆயிரத்து 740 கோடி டாலராக (13 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதி, 29.4 சதவீதம் அதிகரித்து, 43 ஆயிரத்து 410 கோடி டாலராக (21 லட்சத்து 70 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஆக, வர்த்தக பற்றாக்குறை, 16 ஆயிரத்து 670 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
"சென்ற முழு நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,750-1,800 கோடி டாலரைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 1,600 கோடி டாலராக இருந்தது' என, வர்த்தக அமைச்சக செயலர் ராகுல் குல்லார் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|