பதிவு செய்த நாள்
04 மே2012
13:28
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தையில் கடந்த நிதியாண்டில் 24 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த அளவில், ஈரோட்டில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஐந்து இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு நேரடியாக எடுத்து வந்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்காமல், நேரடியாக மக்களுக்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.காய்கறி குறைந்த விலையில் கிடைப்பதால், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் உழவர் சந்தைக்கு வருபவர்கள் எண்ணிக்கை பத்து சதவீதம் அதிகரித்துள்ளது.
வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:
கடந்த 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் வரை, ஓராண்டில் மட்டும், ஐந்து உழவர் சந்தைகளில் 24 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. ஈரோடு சம்பத் நகரில், 7,425 மெட்ரிக் டன் காய்கறி - 10.23 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. பெரியார் நகரில் 2,267 மெட்ரிக் டன் காய்கறி - 3.44 கோடி, கோபியில் 2,842 மெட்ரிக் டன் காய்கறி - 3.88 கோடி, சத்தியில் 2,973 மெட்ரிக் டன் காய்கறி - 4.21 கோடி, பெருந்துறையில் 1,568 மெட்ரிக் டன் காய்கறி - 2.31 கோடி ரூபாய் என, 24.07 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.நேற்று முன்தினம் சம்பத் நகரில் 20 டன் காய்கறி - 14 லட்சம், பெரியார் நகரில் 6.5 டன் காய்கறி - 5 லட்சம், பெருந்துறையில் 4.5 டன் காய்கறி - 70 ஆயிரம், கோபியில் 7.5 டன் காய்கறி - ஒரு லட்சம், சத்தியில் 7.7 டன் காய்கறி - 1.27 லட்சத்துக்கும் விற்பனை நடந்துள்ளது. குறைந்த விலையில் காய்கறி கிடைப்பதால், அதிகளவில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|