பதிவு செய்த நாள்
19 ஜன2013
10:15
புதுடில்லி: மானியமில்லா சமையல் காஸ் விலை, சிலிண்டர் ஒன்றுக்கு, 46.50 ரூபாய் நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், மானியமில்லாத சிலிண்டர் வாங்க வேண்டும் எனில், 936 ரூபாய் செலுத்த வேண்டும். அதேபோல், டீசல் விலையும் சென்னையில், 55 காசு உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு, 50.68 ரூபாயாகியுள்ளது.பொதுமக்களுக்கு மானிய விலையில், வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆறு என, கடந்த செப்டம்பர் மாதம் குறைக்கப்பட்டது. இதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, ஆண்டுக்கு ஒன்பது சமையல் காஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என, நேற்று முன் தினம் மத்திய அரசு அறிவித்தது.அதேநேரத்தில், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டு முறையை கைவிட்டது. இதன்மூலம், சர்வதேச கச்சா எண்ணை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், டீசல் விலையை உயர்த்திக் கொள்ள, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மானியமில்லா சமையல் காஸ் விலை, சிலிண்டர் ஒன்றுக்கு நேற்று, 46.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, டில்லிக்கானது. சென்னையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 46 ரூபாய் உயர்ந்துள்ளது.டில்லியில், மானியமில்லா சமையல் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும் எனில், 942 ரூபாயும், சென்னையில், 936 ரூபாயும் செலுத்த வேண்டும்.அத்துடன், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, டீசல் விலையை லிட்டருக்கு, 50 காசு அளவுக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. மாநில அரசுகள் விதிகள் வரிகளில் மாற்றம் இருப்பதால், டில்லியில், இந்த விலை உயர்வு, 50 காசாகவும், சென்னையில், 55 காசாகவும் இருக்கும்.அதேநேரத்தில், டீசலை அதிக அளவில் பயன்படுத்தும், ராணுவம், ரயில்வே மற்றும் மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்கள், லிட்டருக்கு, 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து டீசலை வாங்க வேண்டும். இந்த விலை உயர்வு மூலம், ஆண்டுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மானியத்தை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இருந்தாலும், கசப்பு மாத்திரை மீது, சிறிது இனிப்பு தடவியது போல, பொதுமக்களுக்கு ஒரு ஆறுதல் பரிசாக, பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 30 காசு அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. சென்னையில், இந்த விலை குறைப்பு, 32 காசாக இருக்கும். இந்த டீசல், சமையல் காஸ் மீதான விலை உயர்வும், பெட்ரோல் மீதான விலை குறைப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|