பதிவு செய்த நாள்
24 மார்2013
00:44
தமிழகத்தில் நடப்பாண்டில் நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு, பொது வினியோக திட்டத்துக்காக அரிசி கொள்முதல் துவக்கப்பட்டுள்ளதால், வெளி சந்தையில் அரிசி விலை மீண்டும் எகிறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.டெல்டா மாவட்டங்கள்:கடந்த ஆண்டு, அரசு பொது வினியோக திட்டத்துக்காக, 23 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்தது. இதில், 16.75 லட்சம் டன் நெல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பாண்டில் காவிரியில், கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்ததால், கடுமையான வறட்சி நிலவுகிறது.டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நெல் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.கடந்த ஆண்டில், இதே கால கட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் இருந்து, அரசு, எட்டு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்தது. தற்போது, 5.90 லட்சம் டன் நெல் மட்டுமே, கொள்முதல் செய்ய முடிந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கிணற்று நீர் பாசனத்தின் மூலம், 100 ஏக்கரில் விளையும் நெல்லை கொள்முதல் செய்தால் கூட, அரசு, மேலும், 1.25 லட்சம் டன் நெல்லை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்க முடியும்.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும், ஒரு குவிண்டால் நெல், சன்ன ரகத்துக்கு, 1,350 ரூபாயும், பிற ரகங்களுக்கு, 1,300 ரூபாயும் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வெளி சந்தையில், வியாபாரிகள், ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகத்தை, 1,450 ரூபாய் வரையிலும், பிற ரகத்தை, 1,400 ரூபாய் வரையிலும் வாங்குகின்றனர்.இந்த வகையில், இதுவரை, 2.50 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 50 ஆயிரம் டன் நெல் மட்டுமே தமிழக ஆலைகளுக்கு கிடைத்துஉள்ளது. இரண்டு லட்சம் டன் நெல் ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.தட்டுப்பாடு:தமிழகத்தில் நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு தொடரும் நிலையில், அரசின் பொது வினியோக திட்டத்திற்கு மாதம், 3.14 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது.
மத்திய தொகுப்பிலிருந்து, 2.96 லட்சம் டன் அரிசி மட்டுமே கிடைக்கிறது.அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதால், பொது வினியோக திட்டத்திற்காக, மாதந்தோறும், 18 ஆயிரம் டன் முதல், 25 ஆயிரம் டன் வரை, வெளி சந்தையில் அரிசியை கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.மேற்குவங்கம்:இந்த நிலையில், நெல் கொள்முதல் பணிகளும் துவங்கிஉள்ளன.
வெளி சந்தையில் நெல், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொது வினியோக திட்டத்துக்கான அரிசியை மேற்குவங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரசு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதற்கு மாறாக, அரசு, தமிழகத்திலேயே அரிசி கொள்முதலை துவக்கி உள்ளது. இதனால், வெளி சந்தையில் அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|