பதிவு செய்த நாள்
10 ஆக2013
00:41
புதுடில்லி:பருத்தி உற்பத்தியில், இந்தியா புதிய சாதனை படைக்கும் என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் நம்பிக்கை தெரிவித்தார்.டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும், சராசரியை விட, அதிகமாக பருவ மழை பெய்துள்ளது. குறிப்பாக, பருத்தி பயிரிடப் பட்டுள்ள பகுதிகளில், நல்ல அளவில் மழை பெய்துள்ளது. அதே சமயம் சில பகுதிகளில், அளவிற்கு அதிகமாக மழை பொழிந்துள்ளது. ஆனால், அதனால், ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தி பாதிக்கப்படாது.
நடப்பு 2013-14ம் நிதியாண்டு, பருத்தி உற்பத்தியில், புதிய சாதனை படைக்கப்படும்.கடந்த 2011-12ம் நிதியாண்டில், 3.52 கோடி பருத்தி பொதிகள் (ஒரு பொதி-170 கிலோ), உற்பத்தி செய்யப்பட்டன. இது, சென்ற, 2012-13ம் நிதி ஆண்டில், 3.40 கோடி பொதிகளாக குறைந்திருந்தது.நடப்பு ஆகஸ்ட் 2ம் தேதி நிலவரப்படி, நாட்டில், பருத்தி பயிரிடும் பரப்பளவு, 1.09 கோடி ஹெக்டேராக (2.69 கோடி ஏக்கர்) உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 1.01 கோடி ஹெக்டேராக இருந்தது.அதிக மழை பொழிவால், மிகச் சிறிய அளவில் தான் பருத்தி பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 1994ம் ஆண்டு முதல் பருத்தி உற்பத்தி அதிகரித்து வருகிறது. அவ்வாண்டில், முந்தைய 50 ஆண்டுகளின் சராசரி அளவை விட, கூடுதலாக 15 சதவீதம் மழை பொழிவு இருந்தது. இதனால், பருத்தி உற்பத்தி சிறப்பாக இருந்தது.இதனால், கவரப்பட்ட நெல் விவசாயிகள், பருத்தி மற்றும் கரும்பு பயிருக்கு மாறினர். நாட்டில் பருத்தி உற்பத்தி அதிகரித்தது. இதன் விளைவாக, உலகளவில் மிக அதிகமாக பருத்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. மேலும், தொடர்ந்து, இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|