பதிவு செய்த நாள்
31 ஆக2013
14:56
மும்பை: ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் இறக்குமதி பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உருக்கு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளில் கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரியை முக்கிய எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இந்த நிலக்கரியை இறக்குமதி செய்வதில் தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தை நுகர்வோர் மீதுதான் சுமத்த வேண்டிய நிலையில் நிறுவனங்கள் உள்ளன. அதே சமயம், உருக்குப் பொருள்களுக்கான தேவைப்பாடு இப்போது சற்றே குறைந்துள்ளதால் முழு சுமையையும் நுகர்வோர் தலையில் வைக்க முடியாத நிலைமை உள்ளது. ‘ரூபாய் மதிப்பு சரிவால் ஒரு டன் உயர்தர நிலக்கரியை இறக்குமதி செய்வதில் ரூ.1000 அதிகரித்துள்ளது. எனினும் இந்த செலவு முழுவதையும் நுகர்வோர் மீது சுமத்த முடியாது. ஏனென்றால் உருக்குப் பொருள்களுக்கான தேவை குறைந்துள்ளது’’ என ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் உலோகம் மற்றும் சுரங்கப் பிரிவு ஆய்வாளர் பவேஷ் சவான் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) 1.78 கோடி டன் அளவிற்கு உருக்குப் பொருள்கள் விற்பனையாகியுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை 0.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவடைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். சென்ற நிதி ஆண்டிலும் (2012–13) உருக்குப் பொருள்கள் விற்பனை 3.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது. இது, அந்த ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 8 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|