பதிவு செய்த நாள்
31 ஜன2014
15:17
தமிழகத்தில் செயல்படும் பேப்பர் மில்களிடம், அரசியல் கட்சியினர், லோக்சபா தேர்தல் நிதி கேட்டு, நெருக்கடி கொடுப்பதால், செய்தித்தாள் உட்பட, மற்ற பேப்பர்களின் விலையை, டன்னுக்கு, 2,500 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளன. இந்த விலை உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில், பேப்பர் தயாரிப்பில், சேசாயி, டி.என்.பி.எல்., பிலாஸ்பூர், ஜி.வி.ஜி., ஜே.ஜே., அமராவதி, வெஸ்ட்கோர்ட், கார்த்திகா உட்பட, 50க்கும் மேற்பட்ட மில்கள் செயல்படுகின்றன. இந்த மில்களில் பேப்பர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான, நிலக்கரி, தோல், மரக்கூழ், பெட்ரோலிய கெமிக்கல் அனைத்துமே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு இணையான, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பேப்பர் தயாரிப்பு, மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த உயர்வை, பேப்பர் விலையில், மில்கள் எதிரொலிக்க செய்துள்ளதால், அனைத்து ரக பேப்பர் விலையிலும், கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. 2012 டிச., கடைசி வாரத்தில், "ஏ' கிரேடு பேப்பர், டன், 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, 2013ல், 20 ஆயிரம் ரூபாய் வரை, விலை உயர்ந்து, 66 ஆயிரம் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. மே மாதம் நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலுக்காக, பேப்பர் மில்களில் அரசியல் கட்சியினர், தேர்தல் நிதி வசூல் நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சி என்று இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும், பேப்பர் மில்கள் சார்பில், கணிசமான தொகை தேர்தல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த செலவை மில்கள், பேப்பர் விலையை உயர்த்துவதன் மூலம், ஈடுசெய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏ கிரேடு பேப்பர் விலை, டன்னுக்கு, 2,000 முதல் 2,500 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டி.என்.பி.எல்., 66,740 ரூபாய்க்கும்; சேசாயி, 69 ஆயிரம்; பிலாஸ்பூர், 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், டி.என்.பி.எல்., டன்னுக்கு, 2,500 ரூபாயும், இதர மில்கள், டன்னுக்கு, 2,000 ரூபாயும், பிப்., 1 முதல், விலை உயர்த்துவதாக தெரிவித்து, சுற்றறிக்கை அனுப்பி உள்ளன.
இதையடுத்து, "பி' கிரேடு பேப்பர் தயாரிப்பு மில்களான, ஜி.வி.ஜி., கார்த்திகா, அமாரவதி ஆகிய மில்களும், பேப்பர் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.சேலம் மாவட்ட, "பேப்பர் அலாய்டு அசோசியேஷன்' நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பேப்பர் மில்கள், அரசியல் கட்சிகளின், தேர்தல் நிதி வசூலை காரணம் காட்டி, பிப்., 1 முதல் டன்னுக்கு, 2,000 முதல் 2,500 ரூபாய் வரை உயர்வு செய்ய உள்ளோம்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|