பதிவு செய்த நாள்
09 மே2014
23:44
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட, 5.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரு மாதங்களில், நாட்டின் ஏற்றுமதிகுறைந்திருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 15 சதவீதம் சரிவடைந்து, 2.14 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை:ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி சரிவடைந்ததையடுத்து, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1.06 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 60 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியும், 0.6 சதவீதம் குறைந்து, 78 ஆயிரம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.எண்ணெய் அல்லாத இதர பொருட்கள் இறக்குமதி, 21.5 சதவீதம் சரிவடைந்து, 2,330 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், தங்கம் இறக்குமதியும், 74.1 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 10,500 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.வெள்ளி இறக்குமதி, 26.5 சதவீதம் குறைந்து, 2,808 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இரும்புத்தாது ஏற்றுமதி, 23.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 912 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 8.1 சதவீதம் குறைந்து, 19,620 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.கடந்த 2013–14ம் நிதியாண்டில் மத்திய அரசு, 19.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.
இறக்குமதி;ஆனால், ஏற்றுமதி, 18.74 லட்சம் கோடி அளவிற்கே இருந்தது. இருப்பினும் இது, முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 3.98 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில், நாட்டின் இறக்குமதி, 8.11 சதவீதம் சரிவடைந்து, 27.06 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. இதன் காரணமாக,கடந்த நிதியாண்டில்,நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, முந்தைய நிதியாண்டின்,11.42 லட்சம் கோடியிலிருந்து,8.31 லட்சம் கோடிரூபாயாக குறைந்தது என, வர்த்தகம் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|