பதிவு செய்த நாள்
11 ஜூன்2014
00:26
மும்பை:சர்க்கரை ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை, மீண்டும் டன்னுக்கு, 3,300 ரூபாயாக நிர்ணயம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், அதன் ஏற்றுமதிக்கு, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
முந்தைய அரசு:இதன்படி, ஒரு டன் சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வந்த, 3,300 ரூபாய் ஊக்கத் தொகை, கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 2,277 ரூபாயாக குறைக்கப்பட்டது.வரும் செப்டம்பரில் முடியும், 2013–14ம் சர்க்கரை பருவத்துடன், இந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை கைவிட, முந்தைய அரசு திட்டமிட்டிருந்தது.இந்நிலையில், கரும்பு விவசாயிகளின் நிலுவையை வழங்கவும், உள்நாட்டில் சர்க்கரை விலை அதிகம் வீழ்ச்சி காணாமல் தடுக்கவும், சர்க்கரை ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது.
இதையடுத்து, மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வேளாண், ஊரக மேம்பாடு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, கரும்பு விவசாயிகளின் துயர் துடைக்கவும், சர்க்கரை உற்பத்தியில் ஆலைகள் எதிர்கொள்ளும் இழப்பை குறைக்கவும், பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அறிவிப்பு:இதையடுத்து, சர்க்கரை ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை, மீண்டும், டன்னுக்கு 3,300 ரூபாயாக உயர்த்துவது என, அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், சென்ற பிப்ரவரி முதல், 2015ம் ஆண்டு செப்டம்பர் வரை மொத்தம் 40 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யவும், அது வரை ஊக்கத் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடப்பு 2013–14ம் சர்க்கரை பருவத்தின் துவக்கத்தில், 92.98 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருந்தது. இத்துடன், 214 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி மற்றும் ஒரு லட்சம் டன் மூலச்சர்க்கரை இறக்குமதி ஆகியவற்றை சேர்த்தால், மொத்தம், 307.98 லட்சம் டன் சர்க்கரை, இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதே காலத்தில், சர்க்கரைக்கான தேவை, 240 லட்சம் டன்னாகவும், ஏற்றுமதி, 20 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரும், 2014–15ம் சர்க்கரை பருவத்தின் துவக்கத்தில், சர்க்கரை கையிருப்பு, 48 லட்சம் டன்னாக இருக்கும்.
ஏற்றுமதி:இது, உள்நாட்டின் நான்கு மாத தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என,தெரிகிறது. இது போன்ற சூழலில், ஊக்கத் தொகை குறைவால், சர்க்கரை ஏற்றுமதி சரிவடைந்தால், அதன் விலை உள்நாட்டில் மேலும் சரிவடையும்.இது, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை சுமையை அதிகரிக்க செய்யும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|