பதிவு செய்த நாள்
18 ஜூன்2014
23:38
இந்தியாவில் இருந்து, தொடர்ந்து தரம் குறைந்த உருளைக்கிழங்கை அனுப்பினால், அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என, ரஷ்யா எச்சரித்துள்ளது.
அல்போன்சா:இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு, இது போதாத நேரம் போலிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, அண்மையில், இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நான்கு காய்கறிகளின் இறக்குமதிக்கு தடை விதித்தது.இதற்கு, பழங்கள், காய்கறிகளில் நிர்ணயித்ததை விட, பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் காணப் படுவதாகவும், பழப் பெட்டிகளில் பூச்சிகள் உள்ளதாகவும், காரணங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில், நடப்பு ஜூன் மாத துவக்கத்தில், ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து, அளவிற்கதிகமாக உள்ளதாக கூறி, இந்திய பச்சை மிளகாய் இறக்குமதிக்கு, சவுதி அரேபியா தடை விதித்தது.இந்த வரிசையில் அடுத்து, ரஷ்யாவும், இந்திய உருளைக்கிழங்கில், பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகள் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, ரஷ்ய அரசின், பிராணி மற்றும் தாவர கண்காணிப்பு சேவைகள் அமைப்பு (எப்.எஸ்.வி.பி.எஸ்.,), மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கை விவரம்:இந்தியாவில் இருந்து வந்த சரக்கு பெட்டகங்களில், 23 பெட்டகங்களில் இருந்த உருளைக் கிழங்கில், பூச்சி மற்றும் நோய்க் கிருமிகள் உள்ளதை, ரஷ்ய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வகையில், ஒரு பெட்டகத்தில், 29 டன் வீதம், மொத்தம், 700 டன் உருளைக்கிழங்கு முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபிடா) தலைவர் சந்தோஷ் சாரங்கி கூறியதாவது:
ரஷ்யா, ஒட்டுமொத்தமாக அனைத்து சரக்கையும் நிராகரிக்கவில்லை. இதுவரை, பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மட்டும் நீக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையால், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்படாது. அதே சமயம், இது, இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி குறித்த கவலையை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
விதிமுறை: இதனிடையே, இறக்குமதி நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என, அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும், அபிடா கடிதம் அனுப்பியுள்ளது.மேலும், அபிடாவின் அங்கீகாரம் பெற்ற கிடங்குகளில், ஏற்றுமதி பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில் தரப்படும் தரச் சான்றிதழை, இறக்குமதி நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும், அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கண்ட தரச் சான்றிதழ் இல்லாமல், இந்திய உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு அனுமதி அளிக்க முடியாது; மாதிரிகளின் சோதனை இரு மடங்கு தீவிரப்படுத்தப்படும் என, ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|