பதிவு செய்த நாள்
07 அக்2014
05:04
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின், பல துறைகளில், இடதுசாரி சிந்தனையாளர்களின் தாக்கம், பெருமளவில் இருந்தது. இது பொதுவாக, கல்வி மற்றும் பொருளாதார கொள்கைகளில், பெருமளவு இருந்து வந்தது.இந்த பொருளாதார சிந்தனைகள் தான், இந்தியாவை, 40 ஆண்டுகளாக, ஒரு ஏழை நாடாக வைத்து கொள்ள உதவியது. இதன் காரணமாக, 1991ல், நம் தேசம் திவாலாகும் நிலைமையை எட்டியது.சோவியத் யூனியன்:அதே தருணத்தில், இந்தியா மட்டுமல்ல, எந்த நாடுகளில் எல்லாம் இடதுசாரி சிந்தனை தோன்றியதோ, அந்நாடுகளும் அதே நிலையை தான் சந்தித்தன. இன்னும் சொல்லப் போனால், இடதுசாரி சிந்தனையின் முக்கிய கேந்திரமாக விளங்கிய, சோவியத் யூனியன் சிதறி, சுக்குநுாறாக உடைந்தது.அதற்கு பின், 20 ஆண்டுகளாக, நேர்மறையான சிந்தனை உள்ளவர்கள், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், அவர்கள், இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், அவ்வப்போது தனது பிதற்றல்கள் மூலம் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.உதாரணமாக, அண்மையில், பிரதமர் மோடி, தன் அரசின் மைய பொருளாதார கொள்கை, ‘மேக் இன் இந்தியா’ என, அறிவித்தார்.அதாவது, உலகத்தின் தொழில்நுட்பம், முதலீடு, மூலப்பொருட்கள் எங்கிருந்து வந்தாலும், முழுமையான உற்பத்தி பொருள், இந்தியாவில் தான் உற்பத்தியாக வேண்டும் என்பது தான் இதன் பொருள்.
இதில், யார் லாபம் அடைவர்?இதற்கு பதில் அளிக்க நீங்கள், ஒரு பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கொள்கை மூலம் நேர்மையான லாபம் அடைபவர்கள், நம் நாட்டின் தொழிலாளிகள். இதை கூட புரிந்து கொள்ளாமல், இடதுசாரியினர், ‘மேக் இன் இந்தியா’, கொள்கைகளை, விமர்சனம் செய்கின்றனர்.இதில், விஷமத்தனமாக கருத காரணம் உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவில் இருந்து – எங்கே, நம் நாட்டு இடதுசாரிகளின் ஆன்மா இருக்கிறதோ – அங்கிருந்து, ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு, பொருட்கள் இறக்குமதி செய்து வந்திருக்கிறோம்.இதன் காரணமாக, சீனா வளர்ந்தது. நமக்கு, தேக்கம் வந்தது. இது தான் நம் நாட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.வேலைவாய்ப்பு:சீனாவில் இருந்து வரும் இறக்குமதியில், பெரும் ராணுவ தளவாடங்களோ, தொழில்நுட்ப பொருட்களோ அல்ல. அங்கிருந்து, விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலைகளையும்; ஹோலிக்கு, வண்ண பவுடரையும் தான் இறக்குமதி செய்துள்ளோம்.இது தான், மோடி, மறைமுகமாக சுட்டிக்காட்டும், ‘மேக் இன் இந்தியா’வின் கொள்கை. ஒரு வேளை, இவற்றை, இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்தால், இந்திய பொருளாதாரம் வளரும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
அதேசமயம், சீனாவுக்கு நஷ்டம்.இதனால், அரசியல் ரீதியாக, இடதுசாரிகள், ‘மேக் இன் இந்தியா’ கொள்கையை எதிர்க்கின்றனர்.அடுத்தபடியாக, இந்தியாவின் மொத்தம் வருமானத்தை ஒப்பிட்டு பார்த்தால், பெரிய நிறுவனங்களின் பங்கு, 10 – 12 சதவீதம். அதுவும், பங்குச் சந்தையை சார்ந்த பெரிய நிறுவனங்களின் பங்கு, 3 – 5 சதவீதம்.இவர்கள், இந்திய பொருளாதாரத்தின் விளிம்பில் தான் உள்ளனர்.
அவர்களை மையமாக கொண்டு, இந்திய பொருளாதாரத்தை விமர்சனம் செய்தவர்கள், இடதுசாரியினர். இதனால் தான், அவர்கள், இந்திய அரசியலில், விளிம்பு நிலையில் உள்ளனர்.இந்த பெரிய நிறுவனங்கள், ஊடகங்களில், முக்கியத்துவம் பெற்றாலும், அவர்கள், இந்திய பொருளாதாரத்தை பிரதிபலிப்பது அல்ல.
பொருளாதார சூழல்:அடுத்தபடியாக, நம் நாட்டின் முதலீட்டு தேவையில், வெளிநாட்டு முதலீட்டின் பங்கு, 2 சதவீதம் தான். எஞ்சியிருக்கும் முதலீடு, உள்நாட்டு சேமிப்பு மூலம் பூர்த்தியாகிறது.அதனால், வெளிநாட்டு முதலீடு பற்றி விமர்சனம் செய்வதோ, அதை கண்டு அச்சம் கொள்வதோ, நம் நாட்டு பொருளாதார சூழ்நிலை ஒப்பிட்டு பார்ப்பதோ தேவையற்றது.இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு, வெளிநாட்டில் இருந்து வரும், 2 சதவீத முதலீட்டை, தாராளமாக ஏற்று கொள்ளும். இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதனால், நம் நாட்டின் பொருளாதாரம் சிதைந்து போகும் என, கூறுபவர்களை பார்த்து, நாம் என்னவென்று ஆறுதல் கூறுவது.அப்படியானால்,= இந்திய பொருளாதாரம் என்ன?= ‘மேக் இன் இந்தியா’ எதை குறிக்கும்?கடந்த 2010 – 11ல், தேசிய மாதிரி ஆய்வு குழுமத்தின் (என்.எஸ்.எஸ்.ஓ.,), 67வது சுற்றின், ஆய்வறிக்கை வெளிவந்தது.அதில், முக்கியமாக சில விஷயங்கள் வெளிவந்தன.அதாவது, 5.76 கோடி குறு, சிறு தொழில்கள், 10 கோடி மக்களுக்கு, வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. இதில், உற்பத்தி, சேவை மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகள் தான் அடங்கும்.குறு, சிறு நிறுவனங்களுக்கு, வங்கிகள், பெரிய அளவிற்கு உதவுவதாக தெரியவில்லை. அதேபோல், அந்த நிறுவனங்கள், அரசின் சலுகைகளை நம்பி இருப்பதில்லை.குறு சிறு நிறுவனங்கள்இந்தியாவின் மொத்த வருமானத்தில், 45 சதவீதம் குறு, சிறு தொழில்களின் பங்கு. அவர்களை நோக்கி தான், மோடியின், ‘மேக் இன் இந்தியா’ கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. அவர்களின் உற்பத்தி தான், அதை சார்ந்த மற்ற குறு, சிறு நிறுவனங்களுக்கு போய் சேருகிறது.
அவர்கள் தான், இந்தியாவின் சேமிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது சேமிப்பு தான், இந்தியாவின், 98 சதவீத முதலீட்டிற்கு பணம் வருகிறது. எஞ்சிய, 2 சதவீதம் வெளிநாட்டு முதலீடு. இதுதான், இந்தியா பொருளாதாரத்தின் இதயம்.இதை தான், மோடி, ‘மேக் இன் இந்தியா’ என்று, கூறுகிறார். உள்நாட்டு முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், நுகர்வோர், சேமிப்பாளர்கள் ஆகியோருக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இந்தியாவில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, 2 சதவீதம் தான் இடம் இருக்கும். ஆனால், 98 சதவீதம், நம் நாட்டினருக்கு தான் இருக்கும்.மோடியின், ‘மேக் இன் இந்தியா’ கொள்கை, ஒரு வேளை, 1960ல் கடைபிடிக்கப்பட்டு இருந்தால், இந்திய பொருளாதார வல்லரசாகியிருக்கும்.இதை கெடுத்தது, இடதுசாரிகள் மற்றும் அவர்களின் சிந்தனையும் தான்.– எம்.ஆர்.வெங்கடேஷ் –பட்டய கணக்காளர் மற்றும் பொருளாதார நிபுணர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|