பதிவு செய்த நாள்
29 அக்2014
23:43
சேலம்: தமிழகத்தில் முட்டை விற்பனையில், வியாபாரிகள் மோசடியில் ஈடுபடுவதை தவிர்க்க, உற்பத்தியாளர்கள், மூன்று விதமான வண்ண கலர்களை முட்டையில் பூசி விற்பனைக்கு அனுப்ப துவங்கி உள்ளனர். உற்பத்தியாளர்களின் இந்த கிடுக்கிப்பிடியால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 3.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 80 லட்சம் முட்டை தமிழகத்தின் தேவைக்கும், 80 லட்சம் முட்டை கேரளாவுக்கும், 70 லட்சம் முட்டை வெளி நாடுகளுக்கும், 70 லட்சம் முட்டை சத்துணவுக்கும், 50 லட்சம் முட்டை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
விலை நிர்ணயம்: இதில், முட்டை விலையை, நாமக்கல் மண்டலத்தில், நாமக்கல்லை மையமாகக் கொண்டு செயல்படும், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியே நிர்ணயம் செய்கிறது. இதே போல் பிற மண்டலங்களில் முட்டை விலை நிர்ணயம் செய்கின்றனர்.தினந்தோறும் உற்பத்தியாகும் முட்டை, அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் முட்டை ஒன்று, 3.15 ரூபாய் நிர்ணயிக்கப்படும் நிலையில், வெளி மாவட்டம், மாநிலங்களின் போக்குவரத்து செலவை கணக்கிட்டு முட்டை விலையில், உயர்வு அரங்கேற்றப்படுகிறது.முட்டையின் அளவு, எடை ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று விதமாக தரம் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.பெரிய, நடுத்தரம், சிறிய என்ற அளவுகளில் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.
கொள்ளை லாபம் :இதில், சிறிய முட்டையின் விலையை விட, நடுத்தர முட்டை, 30 காசு அதிகம், அதை விட பெரிய முட்டை, 40 காசு அதிகம் என்ற அடிப்படையில் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு சப்ளை செய்கின்றனர்.நேற்றைய நிலையில், சிறிய முட்டை, 3.20 ரூபாய்க்கும், நடுத்தர முட்டை, 3.40 ரூபாய்க்கும், பெரிய முட்டை, 3.70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், வியாபாரிகள் லாபம் பெறும் நோக்கில், பெரிய முட்டைகளின் விலையில், சிறிய, நடுத்தர முட்டைகளை கலந்து விற்பனை செய்து, கொள்ளை லாபம் பெற்று வந்தனர். இதைத் தடுக்கும் வகையில், தற்போது உற்பத்தியாளர்கள், பச்சை, சிவப்பு, ரோஸ் ஆகிய நிறங்களில் குறியீடு செய்து, விற்பனைக்கு அனுப்ப துவங்கி உள்ளனர்.
உற்பத்தியாளர்களின் இந்த குறியீட்டால், வியாபாரிகள் முட்டை விற்பனையில் தில்லுமுல்லு செயல்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை, முட்டை விற்பனையில் தில்லுமுல்லு செய்து, லாபம் சம்பாதித்து வந்த வியாபாரிகள், உற்பத்தியாளர்களின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த முட்டை வியாபாரி சக்கரவர்த்தி கூறியதாவது: சத்துணவு முட்டைஉற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் முட்டைகளில், கடந்த மாதம் வரை, எவ்வித குறையீடும் இல்லை.ஆனால், சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டை, வெளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, அதில் மட்டும், பச்சை நிறத்தில், ‘அ’ குறியீடு செய்து சப்ளை செய்வர்.
ஆனால், தற்போது, பெரிய முட்டைகளுக்கும், இரட்டை மஞ்சள் கருவை கொண்டுள்ள முட்டைகளுக்கும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அந்த முட்டைகளை, பிற முட்டைகளில் இருந்து எளிதில் அடையாளம் காணும் வகையில், புதிதாக உற்பத்தியாளர்களே குறியீடு செய்து அனுப்புகின்றனர். இந்த குறியீடு காரணமாக, வியாபாரிகள் பொதுமக்களை ஏமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|